logo
வரத்தை காட்டிலும்திறப்பு அதிகரிப்பு  98 அடியாகக்குறைந்த  பவானிசாகர் அணை  நீர்மட்டம்

வரத்தை காட்டிலும்திறப்பு அதிகரிப்பு 98 அடியாகக்குறைந்த பவானிசாகர் அணை நீர்மட்டம்

21/Oct/2020 06:16:54

ஈரோடு மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாக உள்ள பவானிசாகர் அணை. பவானிசாகர் அணையின் முக்கிய நீர்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப் பகுதி உள்ளது. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையில் கடந்த சில நாட்களாக நீர் பிடிப்பு பகுதியில்  மழை பெய்ததால் பவானிசாகர் அணைக்கு தண்ணீர் அதிகரித்து வந்தது. 

மேலும் பவானிசாகர் அணையில் இருந்து தடப்பள்ளி அரக்கன்கோட்டை பாசனத்திற்கும், கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கும் தொடர்ந்து தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. தற்போது நீர்பிடிப்பு பகுதியில் மிதமான அளவு மழை பெய்வதால் பவானிசாகர் அணைக்கு மிதமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. 

இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணை 98.97 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு ஆயிரத்து 608  கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து தடப்பள்ளி அரக்கன்கோட்டை பாசனத்திற்காக 700 கன அடியும், கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்காக தொடர்ந்து 2300 கன அடியும் என மொத்தம் 3 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணைக்கு நீர்வரத்து காட்டிலும் திறப்பு அதிகரித்து உள்ளதால் அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது.

இதேபோல் நேற்று மாவட்டத்தில் அணைப் பகுதியில் பரவலாக மழை பெய்துள்ளது. குறிப்பாக வரட்டுப்பள்ளம் பெரும்பள்ளம் பகுதிகளில் மிதமான மழை பெய்துள்ளது. பெரும்பள்ளம் - 10 , வரட்டுப்பள்ளம் - 6, சத்தியமங்கலம் - 3, கோபி - 2.6, பவானிசாகர் - 2.4 போன்ற பகுதிகளில் மில்லி மீட்டரில் மழை பதிவாகியுள்ளது. 


Top