17/Feb/2021 06:39:01
புதுக்கோட்டை, பிப்: புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், ஏ.மாத்தூரில் முதலமைச்சரின் அம்மா மினி கிளினிக்கை துவக்கி வைத்தார். பின்னர் அவர் மேலும் கூறியதாவது:
தமிழகத்திலுள்ள பொதுமக்கள் நோயற்ற நல்வாழ்வு வாழும் வகையில் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் சுகாதாரத்துறையில் செயல்படுத்தப்படும் சிறப்பாக திட்டங்களால் இந்தியாவின் பிற மாநிலங்களுக்கு எடுத்துக்காட்டாக தமிழக சுகாதாரத்துறை திகழ்கிறது.
அதனடிப்படையில் கிராமப்புறங்களில் பொதுமக்களுக்கு உயர்தர மருத்துவ சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் ஆரம்ப சுகாதார நிலையம் இல்லாத பகுதிகளில் முதலமைச்சரின் அம்மா மினி கிளினிக்குகள் துவங்க உத்தரவிட்டுள்ளார்கள்.
புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் முதலமைச்சரின் அம்மா மினி கிளினிக்குகள் தொடர்ந்து திறக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக இன்றையதினம் ஏ.மாத்தூரில் அம்மா மினி கிளினிக் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. அம்மா மினி கிளினிக் காலை 8 மணி முதல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் 7 மணி வரையிலும் செயல்படும். சனிக்கிழமை மட்டும் விடுமுறை நாளாகும்.
இந்த மினி கிளினிக்கில் சர்க்கரை அளவு, ஹச்பி அளவு, சளி பரிசோதனை உள்பட பல்வேறு பரிசோதனைகளும், சளி, காய்ச்சல், வயிற்றுப்போக்கு போன்ற பல்வேறு நோய்களுக்கான சிகிச்சை, கர்ப்பிணிகள், குழந்தைகள் மற்றும் முதியோருக்கான சிகிச்சைகள் மற்றும் மருந்து, மாத்திரைகளும் வழங்கப்படும். இதன் பயனாக கிராமப்புற மக்கள் மிகுந்த பயன்பெறுவர்.
மேலும் கறம்பக்குடி ஊராட்சி ஒன்றியம், வெட்டன்விடுதி, மஞ்சுவிடுதி, புதுக்கோட்டை நகராட்சி திருவப்பூர் ஆகிய பகுதிகளிலும் அம்மா மினி கிளினிக்குகள் இன்றைய தினம் திறந்து வைக்கப்படுகிறது. புதுக்கோட்டை மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில் ஏற்கனவே காவிரி கூட்டுக் குடிநீர் திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தற்பொழுது வரலாற்று சிறப்புமிக்க காவிரி-வைகை-குண்டாறு இணைப்புத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
இதே போன்று புதுக்கோட்டை அரசு
மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சென்னைக்கு அடுத்தபடியாக ரூ.70 கோடி மதிப்பீட்டில் புதிய அரசு பல் மருத்துவக் கல்லூரி அமைக்கப்பட உள்ளது. புதுக்கோட்டையில்
துணைக்கோள் நகரமும் அமைக்கப்பட உள்ளது. இதன்
பயனாக புதுக்கோட்டை மாவட்டத்தில் எதிர்கால தலைமுறைகள்
பயன்பெறும் சிறப்பான திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது என்றார் அமைச்சர்
சி.விஜயபாஸ்கர்.
இந்நிகழ்ச்சியில்
மாவட்ட வருவாய் அலுவலர் பெ.வே.சரவணன், மாவட்ட ஊராட்சிக்குழுத்
தலைவர் த.ஜெயலெட்சுமி, பொது சுகாதார துணை இயக்குநர் பா.
கலைவாணி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆர்.நெடுஞ்செழியன், வி.ஆர்.கார்த்திக்தொண்டைமான், ஊராட்சித் தலைவர் நல்லையா, முன்னாள் மாவட்ட கூட்டுறவு அச்சக சங்கத் தலைவர் வே.மு.குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.