logo
கொழும்பில் 5-ஆவது சர்வதேச தமிழியல் ஆய்வு மாநாடு–2021   நடைபெறுகிறது

கொழும்பில் 5-ஆவது சர்வதேச தமிழியல் ஆய்வு மாநாடு–2021 நடைபெறுகிறது

20/Oct/2020 10:58:54

பேராதனைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறையினால் ஆண்டுதோறும் நடாத்தப்படும் சர்வதேசத் தமிழியல் ஆய்வு மாநாட்டுக்கான ஆய்வுக் கட்டுரைகள் கோரப்பட்டுள்ளன.

ஐந்தாவது தடவையாக இடம்பெறவுள்ள ஐந்தாவது சர்வதேசத் தமிழியல் ஆய்வு மாநாடு – 2021 ஆனது, அடுத்த ஆண்டு பெப்ரவரி மாதம் 12 மற்றும் 13 -ஆம் திகதிகளில் இலங்கையிலுள்ள கொழும்பில் நடைபெறவுள்ளது. 

ஈழத்தில் தமிழ் நாடக இலக்கியம்’ எனும் கருப்பொருளில் இடம்பெற உள்ள இந்த ஆய்வு மாநாட்டிற்காக, கூத்துப்பிரதிகள், இசைநாடகப் பிரதிகள், வானொலி நாடகப் பிரதிகள், பா நாடகப் பிரதிகள், சமய நாடகப் பிரதிகள், அரசியல் நாடகப் பிரதிகள், சமூக நாடகப் பிரதிகள், இதிகாச நாடகப் பிரதிகள் சிறுவர் நாடகப் பிரதிகள், மொழிபெயர்ப்பு, தழுவல் நாடகப் பிரதிகள், ஓரங்க நாடகப் பிரதிகள், வரலாற்று நாடகப் பிரதிகள், வீதி நாடகப் பிரதிகள், நிறுவன வழிவந்த நாடகப் பிரதிகள் (பாடசாலை, பல்கலைக்கழகம், கல்லூரிகள், சபாக்கள்) ஆகிய ஆய்வுத்தடங்களினூடான ஆய்வுக்கட்டுரைகள் எதிர்பார்க்கப்படுகின்றன.

 ஈழத்து தமிழ்நாடக வரலாற்றில் மகத்தான பணியை ஆற்றியுள்ள பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையால் நடத்தப்படும் இந்த ஆய்வு மாநாடானது, ஈழத்தில் வெளிவந்த பல்வகையான தமிழ் நாடகப் பிரதிகளை, இலக்கியப் பிரதிகளாகக் கருதி, ஆராய்வதையும், அவற்றைச் சமூக, பண்பாட்டு, அரசியல் தளத்தில் வைத்து வாசிப்பதையும் தனது கருப்பொருளுக்கான முக்கிய நோக்கங்களாகக் கொண்டுள்ளது.

பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர்களான கலாநிதி செல்லத்துரை சுதர்சன் மற்றும் திருமதி ஆன் யாழினி சதீஸ்வரன் ஆகியோர் ஐந்தாவது சர்வதேசத் தமிழியல் ஆய்வு மாநாட்டுக்கான ஒருங்கிணைப்பாளர்களாகக் கடமையாற்றுகின்றனர். 

ஆய்வுக்கட்டுரைகளை அனுப்ப விரும்புவோர், itrc2021pera@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியூடாகவும் 0772323743 / 0778338766 ஆகிய தொலைபேசி எண்களூடாகவும் தொடர்பு கொண்டு மேலதிக விவரங்களை அறிய முடியும். 

ஆய்வுக் கட்டுரைகளின் தலைப்பை அறிவிக்க வேண்டிய திகதி 25.10.2020 எனவும், கட்டுரையை அனுப்ப வேண்டிய திகதி 30.11.2020 எனவும் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Top