28/Jan/2021 06:15:14
ஈரோடு, ஜன:ஈரோடு மாவட்டத்தில் முதலில் கொரோனா தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. தினமும் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு வந்தனர்.மாவட்ட நிர்வாகம் நடத்த தடுப்பு நடவடிக்கை காரணமாக கொரோனா தாக்கம் குறைய தொடங்கியது.அதிக அளவு கொரோனா பரிசோதனை மேற்கொண்டதன் காரணமாக நோய் தொற்று பாதித்தவர்கள் உடனுக்குடன் கண்டறியப்பட்டு குணமடைந்து வருகின்றனர்.
நேற்று சுகாதாரத்துறையினர் வெளியிட்டுள்ள பட்டியல் படி மாவட்டத்தில் மேலும் 19 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் ஈரோடு மாவட்டத்தில் கொரோனா வால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 14 ஆயிரத்து 285 ஆக உயர்ந்தது. ஒரே நாளில் 15 பேர் நோய் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினர். இதனால் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 13 ஆயிரத்து 967 ஆக உயர்ந்தது.தற்போது மாவட்டம் முழுவதும் 168 பேர் மட்டுமே கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவந்த 55 வயது பெண், மற்றும் 76 வயது பெண் உயிரிழந்தனர். இதனால் மாவட்டத்தில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 150 ஆக உயர்ந்தது. கிட்டத்தட்ட நீண்ட நாள் கழித்து இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் ஈரோடு தெற்கு போக்குவரத்து காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர், மற்றும் இரண்டு தலைமை காவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் சப்-இன்ஸ்பெக்டர் பெருந்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இரண்டு பேரும் வீடுகளில் தங்களைத் தனிமைப் படுத்திக் கொண்டுள்ளனர்.
இதையடுத்து ஈரோடு தெற்கு போக்குவரத்து காவல் நிலையத்தில் பணிபுரிந்து வரும் மற்ற போலீசாருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதன் முடிவு விரைவில் தெரியவரும். கொரோனா வால் பாதிக்கப்பட்ட மூன்று போக்குவரத்து போலீசாரும் சமீபத்தில்தான் கோயம்புத்தூரில் முதல்வர் பங்கேற்ற தேர்தல் பிரசாரப் பொதுக் கூட்டத்திற்கு பாதுகாப்பு பணிக்கு சென்று வந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது.