12/Oct/2020 08:25:44
புதுக்கோட்டையில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருள்களை கடத்தி வந்த வாகனத்தையும், அதில் இருந்த ரூ.70 ஆயிரம் மதிப்புள்ள பான் மசாலா பொருள்களை போலீஸார் இன்று பறிமுதல் செய்து 2 பேரை கைது செய்து விசாரிக்கின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் தடைசெய்யப்பட்ட குட்கா மற்றும் பான் மசாலா பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்ததன் பேரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் ரகசிய சோதனை நடத்த உத்தரவிட்டார்.
இதையடுத்து, புதுக்கோட்டை நகர காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது திருச்சியில் இருந்து புதுக்கோட்டைக்கு வந்த ஆம்னி வேனை தடுத்து நிறுத்தி சோதனை செய்தபோது அதில் தடைசெய்யப்பட்ட புகையிலை மற்றும் பான் மசாலா பொருட்கள் இருப்பது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து ஆம்னி வேனை பறிமுதல் செய்த போலீசார் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடத்தி வந்த புதுக்கோட்டை பழைய அரண்மனை வீதியைச் சேர்ந்த அப்துல் சலாம் மற்றும் சத்தியமங்கலத்தை சேர்ந்த நாகராஜன் ஆகியோரை கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்து ரூபாய் 70 ஆயிரம் மதிப்பிலான பான் மசாலா பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.