22/Jun/2021 09:10:26
திருப்பூர்,ஜூன்: திருப்பூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் அடிப்படையில், டோக்கன் வழங்கி, அந்தந்த ஓட்டுச்சாவடி மையங்களில் தடுப்பூசி முகாம் நடத்த மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.
திருப்பூர் வட்டாரத்தில் 6 இடங்கள், குண்டடம் வட்டாரத்தில் 6 இடங்கள், குடிமங்கலம் வட்டாரத்தில் 5 இடங்கள், உடுமலை வட்டாரத்தில் 10 இடங்கள், பல்லடம் வட்டாரத்தில் 8 இடத்தில், தாராபுரம் வட்டாரத்தில் 13 இடங்களில் தடுப்பூசி போட ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இடத்திற்கு தகுந்தவாறு, 80 தடுப்பூசி முதல் 200 தடுப்பூசி வரை போடப்படுகிறது.
தொடக்கத்தில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள
மக்களிடம் தயக்கம் காணப்பட்டது. பல்வேறு விழிப்புணர்வு
காரணமாக, தற்போது மக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள
ஆர்வம் காட்டுவதால், தடுப்பூசி தட்டுப்பாடு நிலவ
துவங்கி உள்ளது. ஒதுக்கீடு தகுந்தாறு, டோக்கன்
விநியோகம் செய்து, தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
தடுப்பூசி போடுவதில் குளறுபடி நடப்பதாகவும்,
டோக்கன்பெறாதவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படுவதாக பல்வேறு இடங்களில் பொது
மக்கள் மறியல் போராட்டம், முற்றுகையில் ஈடுபட்டு
வந்தனர். இவ்வாறான சிக்கலை தவிர்க்கும் வகையில், வாக்காளர் பட்டியல் அடிப்படையில் டோக்கன் விநியோகம் மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, தடுப்பூசி போடப்படும் இடங்களில்,
மாவட்ட நிர்வாக உத்தரவுப்படி, வாக்காளர் பட்டியல் அடிப்படையில் டோக்கன்
வழங்கப்பட்ட நபர்களுக்கு மட்டுமே தடுப்பூசி வழங்கப்படும்,
என தெரிவிக்கப்பட்டு
உள்ளது. மாவட்ட நிர்வாகத்தின் இந்த உத்தரவுக்கு பொது மக்களிடம் வரவேற்பு கிடைத்துள்ளது.