logo
பாவத்தைப் போக்கும் திருவிடைக்கழி முருகன்

பாவத்தைப் போக்கும் திருவிடைக்கழி முருகன்

08/Oct/2020 04:50:47

நாகப்பட்டினம் மாவட்டம், திருக்கடையூர் அருகிலுள்ள திருவிடைக்கழி முருகன், சிவபூஜை செய்த நிலையில் பாவ விமோசன சுவாமியாக வீற்றிருக்கிறார். இவரை தரிசித்தால் பாவம் நீங்கும். 

தல வரலாறு  சூரபத்மனை முருகன் கொன்றார். சூரபத்மனின் மகனான இரண்யாசுரன், முருகனுக்கு பயந்து தரங்கம்பாடி கடலுக்குள் ஒளிந்தான்.  சிவபக்தனான அவனையும், பராசக்தியின் அருளால் முருகன் கொன்றார். அசுரனாக இருந்தாலும், சிவபக்தனைக் கொன்றதால் முருகனுக்கு பாவம் உண்டானது. அதைப் போக்க இங்குள்ள குராமரத்தின் அடியில் தவமிருந்தார். இதனால் திருக்குராவட என இத்தலத்திற்கு பெயர் வந்தது. இவரை தரிசித்தால் பாவம் நீங்கும். 

சிவனுடன் முருகன் இங்கே உள்ள முருகன் ஆறடி உயரத்தில் கிழக்கு நோக்கி நின்ற நிலையில் இருக்கிறார். சுவாமியின் வலது கை அபயம் தரும் விதத்திலும், இடதுகை தொடையில் வைத்தபடி உள்ளன. கருவறையில் ஒரு சிவலிங்கம் உட்புறத்திலும், மற்றொரு லிங்கம், முருகனின் முன்புறமும் உள்ளது. தினமும் அர்த்தஜாம பூஜையின் போது, முருகன் பூஜித்த பத்ரலிங்கத்திற்கு முதலில் பூஜை நடக்கும். குராமரத்தின் அடியில் தியானம் செய்ய மனத்தெளிவு, அறிவுக்கூர்மை உண்டாகும். சரவண தீர்த்தம், கங்கை கிணறு என இரண்டு தீர்த்தங்கள் உள்ளன. ஏழுநிலைகளுடன் கூடிய ராஜகோபுரம் உள்ளது. 

நிச்சயதார்த்த தலம் முருகனை மணம் செய்ய விரும்பிய தெய்வானை, தவம் செய்த தலம் இது. இங்கு இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது. தெய்வானையின் முகம், வெட்கத்தால் சற்று சாய்ந்தது போல் உள்ளது. திருமணத்தடை அகல இவரை வெள்ளிக்கிழமையில் வழிபடலாம். முதல்படைவீடான திருப்பரங்குன்றம் செல்ல தெய்வானை விடை பெற்றதாலும், முருகனுக்கு இரண்யாசுரனைக் கொன்ற பழி கழிந்ததாலும் இத்தலம் விடைக்கழி எனப்படுகிறது. 

 திருமணத்தடை நீங்க வைகாசி, புரட்டாசியில் நடைப்பயணம் வருகின்றனர். 

 திருக்கடையூரில் இருந்து 6 கி.மீ., மயிலாடுதுறையில் இருந்து 21 கி.மீ., 

தைப்பூசம், பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், திருக்கார்த்திகை.நேரம் காலை: 6:00 - 12:00 மணி; மாலை 4:00 - 8:00 மணி 

                                                                               

        


Top