logo
ஈரோடு மாவட்டத்தில்  வழிகாட்டி நெறிமுறைகளுடன் 395 பள்ளிகள் திறப்பு:கேரளா மாணவர்களுக்கு கொரோனா சான்றிதழ் கட்டாயம்

ஈரோடு மாவட்டத்தில் வழிகாட்டி நெறிமுறைகளுடன் 395 பள்ளிகள் திறப்பு:கேரளா மாணவர்களுக்கு கொரோனா சான்றிதழ் கட்டாயம்

02/Sep/2021 12:37:21

ஈரோடு, செப்: ஈரோடு மாவட்டத்தில்  வழிகாட்டி நெறிமுறைகளுடன் 395 பள்ளிகள் திறக்கப்பட்டது. பள்ளி கல்லூரிகளில் பயிலும் கேரளா மாணவர்களுக்கு கொரோனா சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா தாக்கம் காரணமாக பள்ளிகள் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. எனினும் மாணவர்களின் கல்வித்திறன் பாதிக்காத வகையில் அவர்களுக்கு கல்வி தொலைக்காட்சி, ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. இதில் மாணவ- மாணவிகள் பங்கேற்று வந்தனர். இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா தாக்கம் குறையத் தொடங்கியதால் இன்று முதல் 9-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை மாணவ- மாணவிகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதேபோல் கல்லூரிகளும் இன்று முதல் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் தொடங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டு இருந்தது

இதையொட்டி பள்ளிகளில் தூய்மைப்படுத்தும் பணி கடந்த சில நாட்களாக நடந்து வந்தது. இதன்படி புதன்கிழமை  ஈரோடு மாவட்டத்தில் பள்ளிகள் கல்லூரிகள் அரசு அறிவித்துள்ள பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகள் உடன் திறக்கப்பட்டது.

ஈரோடு மாவட்டத்தில் இன்று அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் என 395 பள்ளிகளில் 9ம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு வகுப்புகள் நேரடியாக தொடங்கப்பட்டது.ஏற்கனவே மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள், பணியாளர்கள் கடைப்பிடிக்க வேண்டிய அரசு வழிகாட்டு நெறிமுறைகள் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது. காலையிலேயே மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் பள்ளிக்கு வந்தனர்.

மாணவ மாணவிகளும் முக கவசம் அணிந்து வந்திருந்தனர். பள்ளி வளாகத்தில் சமூக இடைவெளியை கடைபிடித்து வட்டங்கள் போடப்பட்டு இருந்தன. அதில் மாணவ மாணவிகள் நின்று அவர்களுக்கு தெர்மல் ஸ்கேனர் மூலம் உடல் வெப்ப நிலை பரிசோதனை செய்யப்பட்டது. முக கவசம் அணியாமல் வந்த மாணவர்களுக்கு பள்ளி சார்பில் அந்தந்த தலைமை ஆசிரியர்கள் முக கவசம் வழங்கினர்.

 ஒரு வகுப்பறையில் 20 மாணவர்கள் சமூக இடைவெளி கடைப்பிடித்து அமரும் வகையில் இருக்கைகள் அமைக்கப்பட்டு இருந்தன. ஆசிரியர்கள், பள்ளி பணியாளர்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள அரசு ஏற்கனவே அறிவித்துள்ளது. நமது மாவட்டத்தில் 98 சதவீத ஆசிரியர்கள் தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர். மீதமுள்ள 2 சதவீத ஆசிரியர்களுக்கு தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

பள்ளி வளாகத்திலும் வகுப்பறைகளிலும் கடைபிடிக்க வேண்டிய முறைகள் குறித்தும் ஆங்காங்கே நோட்டீஸ் ஒட்டப்பட்டிருந்தது. வகுப்பறையில் நுழைவாயிலில் அவர்களுக்கு சனிடைசர் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. ஒரு பெஞ்சில் சமூக இடைவெளி கடைப்பிடித்து இரு மாணவர்கள் அமர்ந்திருக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மாணவர்கள் ஒருவருக்கு ஒருவர் கை குலுக்கி கொள்ள வேண்டாம், ஒருவர் உணவை மற்றவர்களுக்கு பகிர கூடாது ஒன்றாக அமர்ந்து சாப்பிடவோ பேசவோ கூடாது என மாணவ- மாணவிகளுக்கு ஆசிரியர்கள் அறிவுரை வழங்கினர்.

பிளஸ் - 2, 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தினமும் அதாவது வாரத்துக்கு ஆறு நாட்கள் பாடங்கள் எடுக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மற்ற வகுப்பு மாணவர்களுக்கு சுழற்சி முறையில் பாடங்கள் எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இன்று 9-ம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை மாணவ -மாணவிகள் பெரும்பாலும் பள்ளிக்கு ஆர்வத்துடன் வந்திருந்தனர். நீண்ட நாட்கள் கழித்து தங்களது நண்பர்கள் தோழிகள் பார்த்து மகிழ்ச்சி அடைந்தனர். இன்று பள்ளிகள் திறந்தாலும் மாணவ மாணவிகளுக்கு படங்கள் நடத்தப்படவில்லை.

 பல்வேறு காரணங்களால் பள்ளிக்கு வர முடியாத மாணவர்களுக்கு வழக்கம்போல் ஆன்லைனில் வகுப்புகள் நடத்தப்பட்டன. ஈரோடு கருங்கல்பாளையம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியர்கள் ஆசிரியர்கள் பள்ளிக்கு வந்த மாணவிகளுக்கு ரோஜா பூ கொடுத்து வரவேற்றனர். பள்ளியில் சாமியானா பந்தல் அமைக்கப்பட்டு பள்ளிக்கு வந்த மாணவிகளுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.  

இதேபோல் ஈரோட்டில் இன்று கல்லூரிகளும் திறக்கப்பட்டன. ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை வெளிமாநில மாணவ மாணவிகளும் கல்லூரிகளில் விடுதியில் தங்கி படித்து வந்தனர். குறிப்பாக கேரளாவில் இருந்து ஏராளமான மாணவ மாணவிகள் இங்கு உள்ள விடுதிகளில் தங்கி படித்து வருகின்றனர்.

தற்போது கேரளாவில் கொரோனா தாக்கம் அதிகரித்து வருவதால் கேரளாவில் இருந்து வரும் மாணவ மாணவிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது. குறிப்பாக கேரளாவில் இருந்து வரும் மாணவ மாணவிகள் கண்டிப்பாக கொரோனா தடுப்பூசி போட்டு இருக்க வேண்டும். அதற்கான சான்றிதழ் கையில் வைத்திருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் 72 மணி நேரத்துக்குள் எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனை

 இல்லை என்கிற சான்றிதழ் கொண்டு வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு இருந்தது. சான்றிதழ் இல்லாத மாணவர்கள் கல்லூரிக்குள் அனுமதிக்கப்படவில்லை. இன்று காலை முதலே மாணவ- மாணவிகள் ஆர்வத்துடன் கல்லூரிக்கு வந்தனர். கல்லூரியின் நுழைவாயிலில் அவர்களுக்கு தெர்மல் ஸ்கேனர் மூலம் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டது. இறுதியாண்டு படிக்கும் மாணவ மாணவிகளுக்கு வாரத்தில் 6 நாட்களும் படங்கள் எடுக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மற்ற மாணவர்களுக்கு சுழற்சி முறையில் பாடம் எடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கல்லூரி பேராசிரியர்கள் தடுப்பூசி போட்டிருந்தால் மட்டுமே மாணவர்களுக்கு பாடம் எடுக்க அனுமதிக்கப்பட்டனர். தனித்தனியாக  உணவு அருந்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. சோப்புகள் வைக்கப்பட்டு இருந்தன. கல்லூரி பொருத்தவரை இன்று பெரும்பாலும் மாணவ மாணவிகள் நேரடியாக கல்லூரிக்குள் வந்திருந்தனர். வராதவர்களுக்கு ஆன்லைன் மூலம் வழக்கம்போல் வகுப்புகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

Top