22/Aug/2021 10:47:38
ஈரோடு, ஆக:அந்தியூர், பவானி காவல் நிலையங்கள் என மூன்று காவல் நிலையங்களில் 12 காதல் ஜோடிகள் திருமணம் செய்துகொண்டு பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்ததால் போலீஸார் அதிர்ச்சியடைந்தனர்.
ஆடி மாதம் முடிந்து கடந்த செவ்வாய்க்கிழமை ஆவணி மாதம் பிறந்தது, இந்த மாதத்தின் முதல் சுப முகூர்த்த நாளான இன்று பவானி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஏழு காதல் ஜோடிகள் திருமணம் செய்துகொண்டு அடுத்தடுத்து தஞ்சமடைந்தன, இதேபோல் அந்தியூர் காவல் நிலையத்தில் மூன்று காதல் ஜோடிகளும், பவானி காவல் நிலையத்தில் இரண்டு காதல் ஜோடிகளும் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தன,
காதல் செய்து கொண்ட வந்தவர்கள் அனைவரும் திருமண வயதை எட்டியவர்கள் என்பதால் அவர்களது பெற்றோர்களை அழைத்து போலீசார் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர், இதில் அனைத்து தரப்பு பெண் வீட்டாரும் திருமணத்தை ஏற்றுக் கொள்ளாத நிலையில், அனைத்து மணமகன் வீட்டாரும் திருமணத்தை ஏற்றுக் கொண்டு மணமக்களை தங்களது வீட்டிற்கு அழைத்து சென்றனர். ஒரே நாளில் பவானி உட்கோட்ட காவல் எல்லைக்குட்பட்ட மூன்று காவல் நிலையங்களில் 12 காதல் ஜோடிகள் பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.