logo
மாநிலங்களவை தேர்தல் : திமுக வேட்பாளராக புதுக்கோட்டை எம்.எம்.அப்துல்லா அறிவிப்பு

மாநிலங்களவை தேர்தல் : திமுக வேட்பாளராக புதுக்கோட்டை எம்.எம்.அப்துல்லா அறிவிப்பு

22/Aug/2021 06:40:47

புதுக்கோட்டை, ஆக: மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் திமுக வேட்பாளராக  புதுக்கோட்டையைச் சேர்ந்த எம்.எம்.அப்துல்லா போட்டியிடுவார் என்று திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

மாநிலங்களவையில் எம்பியாக இருந்த அதிமுகவின் முகமது ஜான் கடந்த மார்ச் மாதம் மரணமடைந்ததை தொடர்ந்து அவரது இடம் காலியாக உள்ளது. தொடர்ந்து தமிழக சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற கே.பி முனுசாமி, ஆர்.வைத்தியலிங்கம், ஆகியோர் தங்களது எம்பி பதவியை ராஜினாமா செய்த நிலையில், மக்களவையில் தமிழகத்திற்காக எம்பி காலியிடங்கள் 3 ஆக உள்ளது.

இதில் மரணமடைந்த முகமது ஜானின் பதவிக்காலம் 2025-ம் ஆண்டு ஜூலை மாதம் நிறைவடைவதால், அந்த இடத்திற்கான தேர்தல் வரும் செப்டம்பர் 13-ந் தேதி நடைபெறும் என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையம் கடந்த வாரம் அறிவித்தது. இந்த எம்பி இடத்தை கைப்பற்ற அதிமுக திமுக இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ள நிலையில்,  சட்டசபையில் திமுக அதிக எம்எல்ஏக்கள் வைத்துள்ளதால், இந்த தேர்தலில் திமுக வெற்றிபெறவே அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், தற்போது இந்த மாநிலங்களவை எம்பி இடைத்தேர்தலில் திமுக சார்பில் எம்.எம்.அப்துல்லா போட்டியிடுவார் என்று திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இவர் தற்போது திமுகவின் வெளிநாடு வாழ் இந்திய நல அணியின் இணைச் செயலாளராக பதவி வகித்து வருவது குறிப்பிடத்தக்கது. 

 தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு    சமூக ஆர்வலர்கள் நன்றி

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவருக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி ஒன்றை வழங்க வேண்டுமென கடந்த சில நாள்களுக்கு முன்னர் தமிழக முதல்வருக்கு சமூக ஆர்வலர்கள்  கோரிக்கை விடுத்திருந்தனர். இந்நிலையில், புதுக்கோட்டையைச் சேர்ந்த எம்.எம்.அப்துல்லாவை மாநிலங்களவை தேர்தலில் வேட்பாளராக  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதற்கு புதுக்கோட்டையைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

புதுக்கோட்டை பாராளுமன்றத் தொகுதியை இழந்ததற்குப்பின் புதுக்கோட்டை தொகுதியை மீட்டெடுக்க வேண்டுமென்ற கோரிக்கையை புதுக்கோட்டை மாவட்ட மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில்,புதுக்கோட்டை மக்களின் ஒட்டுமொத்த கோரிக்கையை வலியுறுத்த வசதியாக தற்போது தேர்தல் நடைபெறவுள்ள 3 மாநிலங்களவை உறுப்பினர்களில் ஒன்றை  புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவருக்கு வழங்க வேண்டுமென்று  கோரிக்கை விடுத்தனர். 

கோரிக்கைகயை நிறைவேற்றி வைக்கும் விதமாக  புதுக்கோட்டையைச் சேர்ந்த எம்.எம்.அப்துல்லா  மாநிலங்களவை வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.சமூக ஆர்வலர்கள் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு  நன்றி தெரிவித்துள்ளனர்.


Top