logo
ஈரோட்டில் 2 நாட்களுக்கு பிறகு கடைவீதிகள் மீண்டும் திறக்கப்பட்டன

ஈரோட்டில் 2 நாட்களுக்கு பிறகு கடைவீதிகள் மீண்டும் திறக்கப்பட்டன

17/Aug/2021 06:07:04

ஈரோடு, ஆக: ஈரோடு மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. 

பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களாக கண்டறியப்பட்டுள்ள கீழ்க்காணும் பகுதிகளில் இயங்கும் பால், மருந்தகம், மளிகை கடை, காய்கறி கடைகள், உணவகங்கள் ஆகியவை தவிர பிற கடைகள் அனைத்தும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில்  இயங்க முழுமையாக தடை விதிக்கப்படுகிறது.

மக்கள் அதிகம் கூடும் பகுதிகளாக காணப்படும் ஈரோடு ஈஸ்வரன் கோவில் வீதி, டி.வி.எஸ் தெரு, காந்திஜி ரோடு, பிருந்தா வீதி, பழைய சென்ட்ரல் தியேட்டர் ரோடு, மணிக்கூண்டு, ஆர். கே. வி .ரோடு, மேட்டூர் ரோடு, ஸ்டோனி பாலம், வ.ஊ.சி பூங்கா, காவிரி ரோடு ஆகிய பகுதிகளிலும், பவானியில் காவிரி ரோடு, கூடுதுறை, அம்மாபேட்டை டவுன், மங்களபடி துறை ஆகிய பகுதிகளிலும், கோபியில் மார்க்கெட், கடைவீதி பகுதிகளிலும்.

சத்தியமங்கலத்தில் வரதம்பாளையம், நிர்மலா தியேட்டர் ஜங்ஷன், புளியம்பட்டி மாதம்பாளையம் சந்திப்பு, புளியம்பட்டி பஸ் நிலையம் எதிரில், தாளவாடி பஸ்ரேஸ்வரா பஸ் நிலையம், டி.என். பாளையம் பஸ் நிறுத்தம் அருகில், டி.ஜி.புதூர் ஆகிய பகுதிகளிலும் அத்தியாவசிய கடைகள் தவிர மற்ற கடைகளை திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இந்தப் பகுதியில் உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. ஈரோடு மாநகர் பகுதியில் எப்போதும் பரபரப்பாக காட்சி அளிக்கும் ஈஸ்வரன் கோவில் வீதி, கொங்கலம்மன் கோவில் வீதி, மணிக்கூண்டு, ஆர் கே. வி. ரோடு, மேட்டூர் ரோடு உள்பட பகுதியில் மக்கள் நடமாட்டமின்றி கடந்த இரண்டு நாட்களாக வெறிச்சோடி காணப்பட்டது.

இந்நிலையில் 2 நாட்களுக்கு பிறகு திங்கள்கிழமை  இந்த பகுதிகளில் மீண்டும் அனைத்து கடைகளும் வழக்கம்போல் திறக்கப்பட்டன. ஈரோடு ஆர்.கே.வி. ரோட்டில் உள்ள அனைத்து ஜவுளிக் கடைகளும் திறக்கப்பட்டன. ஏராளமான சாலையோர வியாபாரிகளும் கடைகளை திறந்து வியாபாரத்தில் ஈடுபட்டனர்.

Top