logo
புதுக்கோட்டை மாவட்டத்தில் ஜூன்1 முதல் தற்பொழுது வரை 34,698 மெ.டன் நெல் கொள்முதல்: ஆட்சியர் தகவல்

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஜூன்1 முதல் தற்பொழுது வரை 34,698 மெ.டன் நெல் கொள்முதல்: ஆட்சியர் தகவல்

23/Jul/2021 09:19:16

புதுக்கோட்டை,ஜூலை:   தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் மூலம் புதுக்கோட்டை மாவட்டத்தில் ஜூன்1 முதல் தற்பொழுது வரை 34,698 மெ.டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக   ஆட்சியர் கவிதாராமு  தகவல் தெரிவித்தார்.

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி தாலுகாவில் செயல்பட்டு வரும் அரசு நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யும் பணிகளை  அவர் (22.07.2021) திடீர் ஆய்வு மேற்கொண்டார்.  

பின்னர்  மாவட்ட ஆட்சியர் கூறியதாவது: தமிழக முதல்வரின் விவசாயிகளின் பொருளாதார முன்னேற்றத்தை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். குறிப்பாக விவசாயிகள் தங்கள் நிலங்களில் விளைவித்த நெல்லுக்கு உரிய இலாபம் கிடைக்கும் வகையில் இடைதரகர்கள் இன்றி நேரடியாக அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் பெற்று தொடர்புடைய விவசாயிகளின் வங்கி கணக்குகளிலேயே நேரடியாக அரசால் வரவு வைக்கப்படுகிறது.

அதன்படி, ஆலங்குடி தாலுகா, கலிங்கப்பட்டி மற்றும் எஸ்.குளவாய்பட்டி ஆகிய கிராமங்களில் செயல்பட்டு வரும் அரசு நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யும் பணிகள்  ஆய்வு செய்யப்பட்டது.

 மேலும், புதுக்கோட்டை மாவட்டத்தில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் தற்பொழுது வரை 99 இடங்களில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வருகிறது. மாவட்டத்தில் குறுவை சாகுபடியாக 6,198.92 ஹெக்டேர் பரப்பளவில் 37,194 மெட்ரிக்.டன் நெல் கொள்முதல் செய்திட வேளாண்துறையால் பரிந்துரைக்கப்பட்டு, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக  புதுக்கோட்டை மண்டலம் மூலமாக 1. 6.2021 முதல் தற்பொழுது வரை 34,698 மெட்ரிக்.டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் அனைத்தையும் மழை நீர் உள்ளிட்ட சேதங்களில் பாதிக்காத வகையில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் இருந்து சேமிப்பு கிடங்குகளுக்கு கொண்கு சேர்க்கும் பணிகள் கடந்த ஒருவார காலமாக மேற்கோள்ளப்பட்டு  வருகிறது.

இதுவரை அரசு நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட 31,000 மெட்ரிக்.டன் நெல் மூட்டைகள் சேமிப்பு கிடங்குகளுக்கு பத்திரமாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக அரசு நேரடி நெல்கொள்முதல் நிலையங்களுக்கு விவசாயிகள் கொண்டு வரும் நெல் மூட்டைகளை தாமதமின்றி உடனுக்குடன் கொள்முதல் செய்திட தொடர்புடைய அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே, விவசாயிகள் தாங்கள் விளைவித்த நெல் மூட்டைகளை அருகில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்து பயனடையலாம் என்றார் ஆட்சியர் கவிதாராமு.

Top