logo
போக்சோ சட்டத்தில் 2 -ஆவது முறை கைதானவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும்:கோவை சரக டி.ஐ.ஜி. எச்சரிக்கை

போக்சோ சட்டத்தில் 2 -ஆவது முறை கைதானவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும்:கோவை சரக டி.ஐ.ஜி. எச்சரிக்கை

22/Jul/2021 11:47:21

ஈரோடு, ஜூலை: போக்சோ சட்டத்தில் 2 -ஆவது முறை கைதானவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும்: என கோவை சரக டி.ஐ.ஜி. எச்சரிக்கை விடுத்தார்.

ஈரோட்டில் காக்கும் கரங்கள்  குழுக்கள் சார்பில் வியாழக்கிழமை  நடைபெற்ற பயிற்சியில் கோவை சரக டி.ஐ.ஜி முத்துசாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பயிற்சி வகுப்பை தொடங்கி வைத்தார்.

பின்னர் , டி.ஐ.ஜி முத்துசாமி செய்தியாளர்களிடம் மேலும் அவர் கூறியதாவது:  கோவை ,ஈரோடு, நீலகிரி ,திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் குழந்தைக்கு எதிரான குற்றங்களை குறைக்கும் வகையில் காவல்துறை செயல்பாடு இருந்து வருகிறது. குறிப்பாக, ஈரோடு மாவட்ட எஸ்.பி. சசிமோகன் தலைமையில் காவல்துறை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. 

ஈரோடு மாவட்டத்தில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் வகையில் காக்கும் கரங்கள் குழு அமைக்கப்பட் டுள்ளது.  இந்தக் குழுவில் குழந்தைகள் நலம் சார்ந்த அதிகாரிகள் இடம்பெற்றுள்ளனர் கிட்டத்தட்ட 10 துறைகளைச் சேர்ந்தவர்கள்,  கிராம பஞ்சாயத்தை சிறந்தவர்கள் தன்னார்வலர்கள் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.  ஈரோடு மாவட்டத்தில் 34 குழுக்களாக இது செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இதன் மூலம் குழந்தைகளுக்கு எதிரான குற்றம் போன மாதத்தைவிட இந்த மாதம் குறைந்து உள்ளது இது வரவேற்கத்தக்கது.

 ஈரோடு மாவட்ட காவல்துறை சார்பில்   இது தொடர்பாக  ஒருநாள்பயிற்சி அளிக்கப்படுகிறது. ஈரோடு மாவட்டத்தில் இந்த 34 குழுக்கள்  கிராமம் கிராமமாகச் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். ஏறத்தாழ  இந்த குழு தொடங்கி ஒரு மாதத்திற்குள்ளாகவே 450 கூட்டங்களை நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளனர். இதனால் பெற்றோர்களுக்கும்  விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது.  ஈரோடு மாவட்டத்தில் சுமார் 15 குழந்தைகள் திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. பொதுமக்களும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் நடைபெறும்போது தயங்காமல் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு புகார் கொடுக்க முன்வருகிறார்கள்

அதேபோன்று கடந்த ஜூன் மாதம் 9 போக்சோ  வழக்குகள் பதிவாகி இருந்தது ஆனால் ஜூலை மாதம் 6 ஆக குறைந்துள்ளது. போக்சோ வழக்கில் இரண்டு முறை கைதானவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும் வகையில் நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என்றார் டிஐஜி-முத்துசாமி.

இதில், ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  சசிமோகன் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்..

Top