logo
ஈரோடு மாவட்டத்தில் 5 நாட்களில் ரூ.26.50 கோடிக்கு மதுபான விற்பனை- பணப் புழக்கம் இல்லாததால் விற்பனை சரிந்தது

ஈரோடு மாவட்டத்தில் 5 நாட்களில் ரூ.26.50 கோடிக்கு மதுபான விற்பனை- பணப் புழக்கம் இல்லாததால் விற்பனை சரிந்தது

11/Jul/2021 12:56:05

ஈரோடு, ஜூலை:கொரோனா தாக்கம் காரணமாக தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் அனைத்தும் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு மூடப்பட்டன. ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை 213 டாஸ்மாக் கடைகளும், 128 பார்களும் செயல்பட்டு வந்தன. சாதாரண நாட்களில் ரூ. 3 கோடி முதல் ரூ. 4 வரை வியாபாரம் நடைபெறும். ஆனால் பண்டிகை, விசேஷ நாட்களில் ரூ.10 கோடி வரை வியாபாரம் நடைபெற்று வந்தது. 

இந்நிலையில் கொரோனா தாக்கம் குறையத் தொடங்கியதால் ஈரோடு உள்பட 11 மாவட்டங்களில் கடந்த 5-ஆம் தேதி முதல் டாஸ்மாக் கடைகள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டது. கிட்டதட்ட 2 மாதங்களுக்கு பிறகு டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. மாவட்டம் முழுவதும் 213 டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன .மது பிரியர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு இருந்தது. குறிப்பாக டாஸ்மாக் கடைகள் முன்பு தடுப்புகள் அமைக்கப்பட்டு இருந்தது. 

சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் வட்டங்கள் போடப்பட்டு இருந்தன. மது வாங்க வருபவர்கள் கண்டிப்பாக முக கவசம் அணிந்து வர அறிவுறுத்தப்பட்டிருந்தது. மது பிரியர்கள் காலை முதலே ஆர்வத்துடன் வரிசையில் காத்திருந்து தங்களுக்கு வேண்டிய சரக்குகளை அள்ளிச் சென்றனர். சில இடங்களில் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தன. கிருமிநாசினி மூலம் சுத்தப்படுத்தப்பட்டிருந்தன.  அதேசமயம் பார்களில் உட்கார்ந்து மது அருந்த அனுமதி மறுக்கப்பட்டதால்ஈரோடு மாவட்டத்தில் உள்ள 138 பார்கள் மூடப்பட்டு இருந்தன. 

டாஸ்மாக் திறந்த முதல் நாளில் விற்பனை அதிகமாக இருந்தது. பின்னர் நாளாக நாளாக விற்பனை குறையத் தொடங்கியுள்ளது. இதற்கு முக்கிய காரணம் கொரோனா ஊரடங்கால் மக்களிடம் பணப்புழக்கம் குறைந்துள்ளது. இதனால் டாஸ்மாக் கடைகளிலும் மக்கள் கூட்டம் குறைய தொடங்கியுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில்ஒரே நாளில் அதாவது கடந்த 5-ஆம் தேதி மட்டும் ஈரோடு மாவட்டம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளில் ரூ.7 கோடியே 1 லட்சத்து 77 ஆயிரத்து 510 - க்கு மது விற்பனை நடந்தது. 6 - ஆம் தேதி மாவட்டம் முழுவதும் ரூ. 5 கோடியே 40 லட்சத்து 78 ஆயிரத்து 810 ஆக குறைந்தது. 7-ஆம் தேதி ரூ.5 கோடியே 7 லட்சத்து 16 ஆயிரத்து 730 ஆக குறைந்தது.

8-ஆம் தேதி ரூ. 4 கோடியே 63 லட்சத்து 90 ஆயிரத்து 170 ஆக குறைந்தது. நேற்று மாவட்டம் முழுவதும் ரூ.4 கோடியே 44 லட்சத்து 92 ஆயிரத்து 330-க்கு மதுபானங்கள் விற்பனை ஆனது. கடந்த 5 நாட்களாக மாவட்டம் முழுவதும் மொத்தம் ரூ.26 கோடியே 55 லட்சத்து 40 ஆயிரத்து 550 -க்கு மதுபானங்கள் விற்பனை ஆகி உள்ளதாக டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Top