08/Jul/2021 11:40:46
ஈரோடு, ஜூலை: ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்துக் காணப்பட்டது. குறிப்பாக வெயிலின் வெப்பத்தால் வாகன ஓட்டிகள் கடுமையாக அவதிப்பட்டு வந்தனர். வழக்கம் போல் புதன்கிழமை காலை முதல் மாலை வரை வெயில் வாட்டி வதைத்து வந்தது. பின்னர் இரவில் ஒரு சில இடங்களில் சாரல் மழை பெய்ய தொடங்கியது.
அம்மாபேட்டை, பெருந்துறை, கோபி, பவானி சாகர், நம்பியூர், மொடக்குறிச்சி உள்பட பகுதிகளில் இரவு நேரங்களில் சாரல் மழை பெய்தது.கவுந்தப்பாடி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. மாவட்டத்தில் அதிகபட்சமாக கவுந்தப்பாடியில் 22 மில்லிமீட்டர் மழை பதிவாகி இருந்தது. திடீர் மழையால் பல்வேறு இடங்களில் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது.
ஈரோடு மாவட்டத்தில் நேற்று இரவு பெய்த மழை அளவு மி. மீட்டரில் வருமாறு:பெருந்துறை - 7, கோபி -14, பவானிசாகர் - 10.4, பவானி - 5,நம்பியூர் - 16, மொடக்குறிச்சி - 15, கவுந்தப்பாடி- 22, எலந்தைகுட்டை மேடு - 19, அம்மாபேட்டை - 5.2, கொடிவேரி - 12.3, வரட்டுப்பள்ளம்- 4.4.