05/Jun/2021 07:50:20
புதுக்கோட்டை, ஜூன்: புதுக்கோட்டை அருகேயுள்ள கலிங்கப்பட்டி- அரிமளம் செல்லும் சாலையை சீரமைக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் ஊராட்சி
ஒன்றியம், குளவாய்பட்டிஅருகே பாலையூர் ஊராட்சியை சேர்ந்த குக்கிராமம்
கலிங்கப்பட்டி. அரிமளம் செல்லும் சாலையில் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கிராமத்தில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர்
வசித்து வருகின்றனர்.
இங்கு வசிக்கும் பொதுமக்கள் அத்தியாவசியத் தேவைகளுக்காக அருகிலுள்ள குளவாய்பட்டி அல்லது அரிமளம் ஆகிய ஊர்களுக்குச் செல்ல வேண்டும். தற்போது கொரோனா தொற்று பரவல் காரணமாக இப்பகுதியில் உள்ள பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே செல்லாமல் அச்சத்துடன் முடங்கியுள்ளனர்.
இந் நிலையில் இந்த கிராமத்திலிருந்து வெளியேற உள்ள சாலைகள் 2 பகுதிகளிலும் ஒரு கிலோ மீட்டர் தொலைவுக்கு குண்டும் குழியுமாக கிடக்கின்றன. கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக இந்தச் சாலை சீரமைக்கப்படாததால் இந்தச்சாலையை இரண்டு சக்கர வாகனங்களில் செல்லும் கிராம மக்கள் மிகவும் சிரமப்படும் நிலை நீடித்து வருகிறது. அதுவும் மழைக்காலங்களில் இந்தச்சாலையின் நிலைமை என்னவாக மாறும் என்பதை சொல்லித்தெரிய வேண்டியதில்லை.
மேலும் இங்குள்ள மயானத்துக்கும் மேற்கூரை சேதமடைந்து எலும்புக்கூடு போல காட்சியளிக்கிறது. எனவே, கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக சீரமைக்கப்படாமல் குண்டும் குழியுமான சரிசெய்ய ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் நடவடிக்கை மாவட்ட நிர்வாகம் கவனம் செலுத்த வேண்டுமென இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்