logo
ஈரோடு அமல அன்னை ஆலயத்தில் புனித வெள்ளி சிறப்பு சிலுவைப்பாதை வழிபாடு

ஈரோடு அமல அன்னை ஆலயத்தில் புனித வெள்ளி சிறப்பு சிலுவைப்பாதை வழிபாடு

02/Apr/2021 08:13:32

ஈரோடு, ஏப்: ஈரோடு புனித அமல அன்னை ஆலயத்தில் புனித வெள்ளி சிறப்பு சிலுவைப்பாதை வழிபாடு நடை பெற்றது.

கிறிஸ்தவர்களின் மிக முக்கிய வழிபாடுகளில் ஒன்றாக திகழ்வது புனித வெள்ளி வழிபாடாகும். இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நிகழ்வையும், அவர் சிலுவையில் உயிர் விட்ட நிகழ்வையும் நினைவுகூர்ந்து இந்த நாளில் கிறிஸ்தவர்கள் வழிபாடு செய்வார்கள்.

 இதை முன்னிட்டு 40 நாட்கள் தவக்காலத்தை கிறிஸ்தவர்கள் கடைபிடித்து வருகிறார்கள். கடந்த பிப்ரவரி மாதம் 17-ஆம் தேதி சாம்பல் புதனில் இருந்து தவக்காலம் தொடங்கியது. கடந்த ஞாயிற்றுக்கிழமை குருத்தோலை ஞாயிறாக கடைபிடிக்கப்பட்டது. அதில் இருந்து புனித வாரமாக இந்த வாரம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.  வியாழக்கிழமை  இயேசுவின் கடைசி இரவு உணவு நிகழ்வை நினைவு கூர்ந்து நற்கருணை நிறுவும் வழிபாடு நடந்தது.

ஈரோடு புனித அமல அன்னை ஆலயத்தில் வியாழக்கிழமை பிற்பகலில்பங்குத்தந்தையும் ஈரோடு மறை வட்ட முதன்மை குருவுமான ஜான் சேவியர், உதவி பங்குத்தந்தை ஜான்சன் தலைமையில் நற்கருணை நிறுவும் வழிபாடு சிறப்பு திருப்பலியுடன் நடந்தது. பின்னர் ஆலயத்தில் உள்ள நற்கருணை பேழையில் இருந்து நற்கருணை இடமாற்றம் செய்யப்பட்டது. தொடர்ந்து நள்ளிரவு 12 மணிவரை நற்கருணை ஆராதனை நடந்தது. மறுநாள்  புனித வெள்ளி சிறப்பு வழிபாடுகள் காலை 6 மணி முதல் தொடங்கின. பகல் 11 மணி வரை மவுன ஆராதனை நடந்தது.

பகல் 11 மணிக்கு இயேசு கிறிஸ்துவின் சிலுவைப்பாடுகளை நினைவு கூர்ந்து சிலுவைப் பாதை வழிபாடு நடந்தது. இயேசு கிறிஸ்து சிலுவை மரணத்துக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டதில் இருந்து சிலுவையில் தனது உயிரை ஒப்படைத்தது வரை 14 நிகழ்வுகள் இந்த சிலுவைப்பாதை வழிபாட்டில் நினைவுகூரப்பட்டது. வெயிலையும் பொருட்படுத்தாமல் ஏராளமான கிறிஸ்தவர்கள் சிலுவைப்பாதை வழிபாடுகள் நடந்தது. பங்குத்தந்தை ஜான் சேவியர், உதவி பங்குத்தந்தை ஜான்சன் ஆகியோர் சிலுவைப்பாதையை வழிநடத்தினார்கள். மாலையில் திருச்சிலுவை ஆராதனை வழிபாடு நடந்தது.

இதையடுத்து சனிக்கிழமை இரவு 10.30 மணிக்கு இயேசுவின் உயிர்ப்பு (ஈஸ்டர்)பெருவிழா சிறப்பு திருப்பலி வழிபாடுகள் தொடங்குகின்றன. ஞாயிற்றுக்கிழமை  ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

Top