29/Sep/2020 09:59:46
இந்தியாவில் கல்வி தரத்தில் முதலிடம் வகிக்கும் டெல்லி மாநில ஆம்ஆத்மி அரசு சமீபத்தில் டெல்லி மாநில சட்டசபையில் சிறப்பு கூட்டத்தை கூட்டி டெல்லி முதலமைச்சர் மாண்புமிகு திரு.அரவிந்த் கெஜ்ரிவால் அவர்களால் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வந்த 15,000 ஆசிரியர்களுக்கு நிரந்தர பணி வழங்குவதற்கான மசோதா ஒன்று சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஆனால், தமிழ்நாட்டில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த காலத்தில் அதாவது 2012 மார்ச் மாதம் தொகுப்பூதியம் அடிப்படையில் 16 ஆயிரத்து 549 பகுதி நேர ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர்.
பகுதிநேர ஆசிரியர்களாக நியமிக்கப்பட்ட இவர்கள் கடந்த ஒன்பது ஆண்டுகளாக தொகுப்பூதிய தற்காலிக ஆசிரியர்களாகவே பணியாற்றி வருகின்றனர். இவர்கள் பணியில் அமர்த்தப்பட்ட போது ரூ.5,000 தொகுப்பூதியமாக இவர்களுக்கு இருந்தது. பின்னர் ஊதிய உயர்வாக ரூபாய் இரண்டாயிரம் 2014-இல் உயர்த்தப்பட்டு பின்னர் ரூ.700 அதிகப்படுத்தப்பட்டு தற்பொழுது ரூ.7,700 இவர்களுக்கு தொகுப்பூதியமாக தமிழகத்தில் வழங்கப்பட்டு வருகிறது.
இது தமிழக அரசு நிர்ணயத்துள்ள தொழிலாளர்களின் குறைந்தபட்ச கூலித் தொகையை விட குறைவானது. ஆனால் படித்து பட்டம் பெற்று ஆசிரியர்களாக வருபவர்களுக்கு ரூபாய் 7,700 மட்டுமே வழங்கபடுகிறது என்பது வினோதமாக உள்ளது.
இவ்வளவு குறைந்த சம்பளத்தில் ஆசிரியர்கள் பணி செய்வது என்பது மிகவும் சிரமமானதாகும் ஆசிரியர்கள் மகிழ்ச்சியாக இருந்தால்தான் மாணவர்களுக்கு நல்ல கல்வி கிடைக்கும் இதை தமிழக அரசு உணர வேண்டும்.
ஆகவே தமிழக கல்வித்துறை இனியும் தாமதிக்காமல் ரூபாய் 7,700 மட்டுமே பெற்றுக்கொண்டு கடந்த 9 ஆண்டுகளாக பகுதிநேர ஆசிரியர்களாக பணியாற்றி வரும் அனைவரையும் நிரந்தர பணி ஆசிரியர்களாக தமிழக அரசு உடனடியாக நியமிக்க வேண்டும்.
பகுதி நேர ஆசிரியர்கள் பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையனை நேரில் சந்தித்து தங்கள் கோரிக்கைகளை எடுத்து வைத்த போது பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய மூன்று மாதத்திற்குள் ஒரு குழு ஆரம்பித்து அதற்கான தீர்வு காணப்படும் என்று கடந்த 2017 -ஆம் ஆண்டு ஜுன் மாதம் அவர்களிடம் வாக்குறுதி அளித்திருக்கிறார். ஆனால் இதுவரை பள்ளிக்கல்வித்துறை எந்த ஒரு முடிவும் இது சார்பாக எடுத்ததாக தெரியவில்லை.
புது தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அவசர சட்டம் நிறைவேற்றி 15,000 பகுதி நேர ஆசிரியர்களை மாணவர்களின் நலன் கருதி பணி நிரந்தரம் செய்ததுபோல் தமிழக சட்டமன்றத்திலும் வரும் கூட்டத்தொடரிலேயே ஒரு அவசர சட்ட மசோதாவை நிறைவேற்றி வாழ்வதற்கே அவதிப்படும் தற்போதுள்ள சுமார் 12,000 பகுதிநேர ஒப்பந்த ஊதிய ஆசிரியர்களை நிரந்தர பணி ஆசிரியர்களாக நியமிக்க தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் ஆகியோர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் தமிழக ஆம் ஆத்மி கட்சியின் சார்பாக வலியுறுத்துவதாக அதில் தெரிவித்துள்ளார்.