06/May/2021 11:40:24
ஈரோடு, மே: கொரோனா இரண்டாவது அலை பரவலைக்கட்டுப்படுத்த இன்று முதல் புதிய கட்டுப்பாடு அமலப்படுத்தப் பட்டுள்ளது. இதன் மூலம் மளிகை, காய்கறி, இறைச்சி கடைகளுக்கு பகல் 12 மணிவரை திறந்திருக்க அனுமதிக்கப் பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருவதையடுத்து பல்வேறு கட்டுப்பாடுகள் தொடர்ச்சியாக விதிக்கப்பட்டு வருகிறது. கடந்த மாதம் ஏப்ரல் 20-ஆம் தேதி முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை இரவு நேர ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதேபோல் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளில் முழு நேர ஊரடங்கும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
ஊரடங்கின் போது தேவையில்லாமல் வெளியே சுற்றுபவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்து
வருகின்றனர்.எனினும் நாளுக்கு நாள் தொற்று பாதிப்பு உள்ளவர்களின் எண்ணிக்கை
தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதையடுத்து மேலும்
புதிய கட்டுப்பாடுகள் மே.6 முதல்
அமலுக்கு வந்துள்ளன.
ஈரோடு மாவட்டத்திலும் கொரோனா 2-ஆம் அலை வேகமாக பரவி வருகிறது. தினமும் 500- க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதையடுத்து மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் எடுக்கபட்டு வருகிறது. மே.6-ஆம் தேதி முதல் 20-ஆம் தேதி வரை இந்த புதிய கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, 6.5.2021 முதல் காய்கறி, மளிகை, டீ, இறைச்சி கடைகள், மீன் கடைகள் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரை மட்டுமே இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மற்ற அனைத்து விதமான கடைகள் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஜவுளி கடைகள், பாத்திரக் கடைகள், எலக்ட்ரானிக் கடைகள், செல்போன் ரீசார்ஜ் கடைகள் உட்பட அனைத்து வகையான கடைகள் மூடப்படும். பேருந்து போக்குவரத்தை பொறுத்தவரை தனிமனித இடைவெளியை கடைப்பிடித்து 50 சதவீத பயணிகளுடன் மட்டுமே இயக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதுபோல் டாக்ஸி, ஆட்டோ வாகனங்களும் இதே முறையைக் கடைப்பிடிக்க வேண்டும்.
உணவகங்கள் வழக்கம் போல் செயல்படும். ஆனால் பார்சலில் மட்டுமே வழங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி காலை 6 மணி முதல் 10 மணி வரையிலும், பகல் 12 மணி முதல் 3 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் பார்சலில் மட்டுமே உணவு வழங்கப்படும். இதேபோல் அம்மா உணவகங்கள் வழக்கம் போல் செயல்படும் ஆனால் பார்சல் மட்டுமே மேலே குறிப்பிட்ட நேரப்படி உணவு வழங்கப்படும்.
ஏற்கெனவே மாநகராட்சி நகராட்சிகளில் அழகு நிலையங்கள், சலூன் கடைகள் செயல்பட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மே 6 முதல் முதல் ஊரகப் பகுதிகளிலும் செயல்பட தடை விதிக்கப்படுகிறது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள 37 திரையரங்குகளும் மே.6 -ஆம் தேதி முதல் மூடப்படுகின்றன.
அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் 50 சதவீத ஊழியர்களுடன் பணியாற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதையொட்டி முதல்நாளான புதன்கினமை காய்கறி மார்க்கெட்டில் மக்களின் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக இருந்தது. குறிப்பாக நேதாஜி காய்கறி மார்க்கெட்டில் காலை முதலே மக்கள் கூட்டம் அதிகமாகக்காணப்பட்டது.