22/Apr/2021 05:44:01
புதுக்கோட்டை, ஏப்: மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தின் மூலமாக மாதந்தோறும் ரூ.1,500 உதவித்தொகை பெறும் மாற்றுத்திறனாளிகள் தங்களது வாழ்நாள் சான்றினை சமர்ப்பிக்க வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலமாக மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் 40 சதவீதம் அதற்கு மேல் பாதிக்கப்பட்ட மனவளர்ச்சி குன்றியோர், தசைசிதைவு நோயால் பாதிக்கப்பட்டோர், தொழுநோயால் பாதிக்கப்பட்டோர், முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டோர், பார்கின்சன் நோய், நாள்பட்ட நரம்பியல் குறைபாடுடையோர் மற்றும் 75 சதவீதம் அதற்குமேல் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்ட பல்வகை மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகையாக ரூ.1,500 வழங்கப்பட்டு வருகிறது.
மேற்காணும் இத்திட்டத்தின் கீழ் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தின் மூலமாக மாதாந்திர உதவித்தொகை ரூ.1,500 பெற்று பயனடைந்து வரும் மாற்றுத்திறனாளிகளின் பெற்றோர் அல்லது பாதுகாவலர்கள் அனைவரும் புதுக்கோட்டை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்துக்கு நேரில் வந்து வாழ்நாள் சான்று படிவம் பெற்று, அதில் கிராமநிர்வாக அலுவலரிடமிருந்து கையொப்பம் பெற்று உரிய சான்றுகளுடன் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் வருகி 30.4.2021 தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு 04322-223678 என்ற தொலைபேசி எண்ணில் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.