logo
மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்கள் குடியரசுத்தலைவரின் ஒப்புதலுக்குப்பின் அரசிதழில் வெளியீடு

மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்கள் குடியரசுத்தலைவரின் ஒப்புதலுக்குப்பின் அரசிதழில் வெளியீடு

28/Sep/2020 10:06:12

மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட 3 வேளாண் மசோதாக்கள் கடும் எதிர்ப்புகளுக்கு இடையே நாடாளுமன்றத்தில் நிறைவேறியதைத் தொடர்ந்து தற்போது  குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளதையடுத்து அது அரசிதழிலும் வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட வேளாண் விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் மசோதா, அத்தியாவசியப் பொருட்கள் திருத்த மசோதா ஆகிய 3 மசோதாக்களுக்கும் நாடாளுமன்ற மக்களவையில் கடந்த 15-ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து இந்த வேளாண் மசோதாக்கள் மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டு கடந்த 22-ஆம் தேதி நிறைவேற்றப்பட்டன.

இதற்கு எதிர்க்கட்சிகளும், விவசாயிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அவசர அவசரமாக குரல் வாக்கெடுப்பு மூலம் வேளாண் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.3 வேளாண் மசோதாக்களையும் திரும்பப்பெறக்கோரி பஞ்சாப், ஹரியாணா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் விவசாயிகள் அரசியல் கட்சிகளுடன் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.

வேளாண் மசோதாவிற்கு எதிராக பஞ்சாபில் நான்காவது நாளாக விவசாயிகளின் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்று வருகிறது.வேளாண் மசோதாக்களை விசாரணைக் குழுவிற்கு அனுப்ப வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்திய நிலையில், 3 வேளாண் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கக் கூடாது என்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திடம் எதிர்க்கட்சிகள் கூட்டாக கடிதம் மூலம் வலியுறுத்தி வந்தனர்.

அது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிர்க்கட்சி உறுப்பினர்களிடம் கூறிய குடியரசுத் தலைவர் வேளாண் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளார். அவரது ஒப்புதலைத் தொடர்ந்து மசோதாக்கள் அரசிதழிலும் வெளியிடப்பட்டுள்ளன.

Top