logo
7 பேர் விடுதலை வழக்கில் உணர்வுபூர்வமாக பார்க்கக் கூடாது: பாஜக மாநில துணைத்தலைவர் அண்ணாமலை

7 பேர் விடுதலை வழக்கில் உணர்வுபூர்வமாக பார்க்கக் கூடாது: பாஜக மாநில துணைத்தலைவர் அண்ணாமலை

08/Feb/2021 06:48:55

ஈரோடு, பிப்: 7 பேர் விடுதலை வழக்கை உணர்வு பூர்வமாக பார்க்கக் கூடாது என்றார் பாஜக மாநில துணைத்தலைவர் அண்ணாமலை.

 ஈரோட்டில் திங்கள்கிழமை  நிருபர்களுக்கு அளித்த பேட்டி: பாரதிய ஜனதா அரசு  2020-21 -ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்து உள்ளது .இது வரலாற்று சிறப்பு மிக்க பட்ஜெட். கொரோனாவால் இழந்த பொருளாதாரத்தை மத்திய அரசு மீட்டு வருகிறது. 

இந்த பட்ஜெட்டில் உள்கட்டமைப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. சென்னை மெட்ரோ ரெயில் விரிவாக்கத்திற்கு ரூ.63 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 7 ஜவுளி பூங்கா அமைக்க அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில் தமிழகத்தில் இரண்டு ஜவுளி பூங்காக்கள் வர உள்ளது. அதில் ஒன்றை ஈரோடு மாவட்டத்திற்கு கொண்டுவர முயற்சி செய்வோம்.

 மருத்துவத்திற்கும் இந்த பட்ஜெட்டில் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. கொரோனாவுக்கு ரூ. 35 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. தற்போது இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இரண்டு தடுப்பூசிகள்  முன் களப்பணியாளர்களுக்கு போடப்பட்டு வருகிறது. அடுத்ததாக இரண்டு மருந்துகள் வர உள்ளது. இதற்காக மேலும் நிதி ஒதுக்கப்படும்.சுயசார்பு இந்தியாவுக்காக இந்த பட்ஜெட்டில் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.

 உஜ்வாலா திட்டம் மூலம் இந்தியாவில் இதுவரை 8 கோடியே 83 லட்சம் பேருக்கு இலவச கேஸ் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.  75 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள்  வருமான வரி செலுத்த வேண்டிய அவசியமில்லை என்ற சிறப்பு மிக்க அறிவிப்பு இந்த நிதிநிலை அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ளது.

பாரதிய ஜனதா அரசு கொரோனாவை வெற்றிகரமாக கையாண்டது. 7 பேர் விடுதலை பொறுத்தவரை இதில் 4 பேர் இந்தியர்கள் இல்லை.இலங்கையைச் சேர்ந்தவர்கள். மூன்று பேர் தமிழர்கள். இந்த வழக்கை சி.பி.ஐ விசாரணை நடத்தி வருகிறது. இது சாதாரண வழக்கு அல்ல. முன்னாள் பிரதமர் கொலை செய்யப்பட்டுள்ளார். உச்சநீதிமன்றம்  இப்பிரச்னையில்  மாநில ஆளுநர் விரைந்து  முடிவை அறிவிக்க வேண்டும் என்று கூறியது. 

அதற்கு பிறகு,  ஆளுநர் கலந்தாலோசித்து குடியரசுத் தலைவர்தான் முடிவு எடுக்க வேண்டும் என்று தற்போது கூறியுள்ளார். ஆளுநர் காலதாமதம் செய்ததாக கூற முடியாது. அவர்கள் அனைவரும் தண்டிக்கப்பட்ட குற்றவாளிகள். தமிழர்கள் என்று உணர்ச்சிபூர்வமாக பார்க்கக் கூடாது. தமிழ்நாட்டிற்கு கொரோனா காலகட்டத்தில் மத்திய அரசு ரூ.3 லட்சம் கோடி வழங்கியுள்ளது. 

தில்லியில் விவசாயிகள் என்ற பெயரில் ஒரு சிலர் ஊடுருவி  போலீசாரை தாக்கி உள்ளனர். சசிகலா தமிழகம் வருகையால் அரசியலில் மாற்றம் ஏற்படுமா. என்ற கேள்விக்கு, நாங்கள் அதிமுக கட்சியுடன் கூட்டணியில் உள்ளோம். அவர் தண்டனை முடிந்து வருகிறார். இது கட்சிக்குள் உள்ள குழப்பங்களை அவர்கள் தீர்த்துக் கொள்வார்கள். எங்களை பொறுத்தவரை தமிழகத்தில் திமுக ஆட்சி அமைக்கக் கூடாது.

விசைத்தறியாளர்கள் நெசவாளர்கள் இந்த இடம் சில பிரச்னைகள் குறித்து கூறி உள்ளார்கள். அவர்களை இந்த மாத இறுதிக்குள் தில்லிக்கு அழைத்துச் சென்று அமைச்சர்களிடம் பேசவைத்து பிரச்னைக்கு தீர்வு காண முயற்சி செய்வோம். இவ்வாறு அவர் கூறினார்.

Top