19/Mar/2021 01:52:13
புதுக்கோட்டை, மார்ச்: புதுக்கோட்டையில் டாம்ப்கால் நிறுவனத்தின் இரண்டாவது உற்பத்தி பிரிவில் அரசு அனுமதியுடன் விரைவில் 50 வகை மருந்துகள் தயாரிக்கவுள்ளதாக அந்நிறுவனத்தின் புதுக்கோட்டை உற்பத்தி பிரிவின் சிறப்பு அலுவலர் டாக்டர் ஆர். மோகன் தெரிவித்தார்.
இது குறித்து மேலும் அவர் கூறியதாவது: புதுக்கோட்டை அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் டாம்ப்கால் மருந்து தயாரிப்பு நிறுவனத்தின் இரண்டாவது உற்பத்தி பிரிவு கடந்த 25.2.2021 -இல் திறந்து வைக்கப்பட்டது.
இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறையின் கீழ் டாம்ப்கால் மருந்து உற்பத்தி நிறுவனம் சென்னை ஆலந்தூரில் செயல்பட்டு வருகிறது. சித்தா, ஆயுர்வேதா, யுனானி, யோகா, நேச்சுரபதி ஆகிய பிரிவுகளுக்கு தேவையான மருந்துகள் அங்கு தயாரிக்கப்பட்டு தமிழகம் முழுவதும் உள்ள அரசு சித்த மருத்துவமனைகளுக்கு விநியோகிக்கப்படுகிறது.
இந்நிலையில், புதுக்கோட்டை.யிலுள்ள அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் இயங்கி வரும் டாம்ப்கால் மருந்து செய்யும் நிலையத்தில் நிலவேம்பு குடிநீர், கபசுர குடிநீக், சூரணம், லேகியம், தைலம், சித்தா, ஆயுர்வேதா, யுனானி, யோகா, நேச்சுரபதி ஆகிய பிரிவுகளுக்கு தேவையான மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன. மேலும் 50 வகையான மருந்துகள் தயாரிப்பதற்கு தேவையான உரிமம் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது
இந்த உற்பத்தி பிரிவு தொடங்கியதன் மூலம் சென்னையிலுள்ள டாம்ப்கால் நிறுவனத்துக்கு செல்வது தவிர்க்கப்பட்டு தென்பகுதியிலுள்ள 18 மாவட்டங்களுக்கு புதுக்கோட்டையில் இருந்து மருந்துகளை விரைவாக அனுப்ப முடியும். இதன் மூலம்நேரமும் அலைச்சவும் மிச்சமாகும் என்றார் டாம்ப்கால் சிறப்பு அலுவலர் மோகன்.