logo
ஈரோட்டில் 4 -ஆவது நாளாக தொடரும் காத்திருப்பு போராட்டம்: தில்லியில் உயிர் நீத்த விவசாயிகளுக்கு சுடர் ஏற்றி அஞ்சலி

ஈரோட்டில் 4 -ஆவது நாளாக தொடரும் காத்திருப்பு போராட்டம்: தில்லியில் உயிர் நீத்த விவசாயிகளுக்கு சுடர் ஏற்றி அஞ்சலி

18/Dec/2020 10:20:26

ஈரோடு- டிச: மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி தில்லியில் லட்சக் கணக்கான விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களது போராட்டம்  22 - ஆவது நாளாக நீடித்து வருகிறது.

தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து பல்வேறு அரசியல் கட்சியினர் ,தொழிற்சங்கத்தினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும் தில்லியில் போராட்டம் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு சார்பில் ஈரோடு அரசு மருத்துவமனை அருகே உள்ள தனியார் காலி இடத்தில் கடந்த 14-ஆம் தேதி முதல் தொடர் காத்திருப்பு போராட்டம் நடந்து வருகிறது.

அவர்களது போராட்டம் 4 -ஆவது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. போராட்டத்திற்கு அகில இந்திய விவசாயிகள் போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் முனுசாமி தலைமை வகித்தார். 

ஒருங்கிணைப்பாளர்கள் துளசிமணி, சுப்பு, பொன்னையன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  ஈரோடு தெற்கு மாவட்ட தி.மு.க.செயலாளர் சு. முத்துசாமி, கம்யூனிஸ்ட் கட்சியினர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர், விவசாய சங்க பிரதிநிதிகள், விவசாயிகள் பெண்கள் என நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

இதையொட்டி, தில்லி போராட்டத்தில் உயிர் நீத்த விவசாயிகளுக்கு  சுடர் ஏந்தி வீரவணக்கம் செலுத்தப்பட்டது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.அவர்கள் அகல் விளக்கு ஏந்தி உயிர் நீத்த விவசாயிகளுக்கு மவுன அஞ்சலி  செலுத்தினர்.  பின்னர் தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து கண்டன முழக்கமிட்டனர். 

 

Top