logo
தமிழகத்தில் அடுத்து அமையப் போவது திமுக ஆட்சிதான்: மு.க.ஸ்டாலின் பேச்சு

தமிழகத்தில் அடுத்து அமையப் போவது திமுக ஆட்சிதான்: மு.க.ஸ்டாலின் பேச்சு

20/Dec/2020 11:46:08

சென்னை: தமிழகத்தில் அடுத்து அமையவுள்ளது திமுக ஆட்சிதான் என்று அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் நாம் தான் வெல்லப்போகிறோம். ஆனால் அந்த வெற்றியை எளிதில் பெற விடமாட்டார்கள். அதற்காக போராட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

திமுக மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகள் உடனான ஆலோசனைக் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் மேலும் பேசியதாவது: திமுக  சார்பில் 16,000 கிராம சபைக் கூட்டங்கள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. திமுக ஆட்சி மலர வேண்டும் என்பதே திமுகவினர் லட்சியமாக இருக்க வேண்டும். ஒவ்வொரு தொகுதியிலும் உதயசூரியனின் வேட்பாளர்கள் கருணாநிதியின் வேட்பாளர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

உங்களுடைய சக்தியை முழுமையாக பயன்படுத்துங்கள். அர்ஜூனன் குறிபோல திமுகவினரின் குறி தப்பாது என்பதை நிரூபிக்க வேண்டும் என்று கூறினார்.கட்டாயப்படுத்தி கட்சி தொடங்க வைத்துள்ளனர்.பணத்தை வெல்லும் சக்தி மக்களின் மனங்களில் உண்டு என்பதை நிரூபிக்க வேண்டும். திமுக ஜெயித்துவிடக்கூடாது என்பதற்காக சிலரை கட்டயப்படுத்தி கட்சித் தொடங்க வைத்துள்ளனர் . நமக்கு எதிராக மும்முனைத் தாக்குதல்கள் நடத்துகிறார்கள். மும்முனைத் தாக்குதலில் நாம் மாட்டிக்கொண்டாலும் 6-வது முறையாக நாம் தேர்தலில் வெற்றி பெற்று காட்ட வேண்டும்.

200 தொகுதிகள் இலக்கு: 

நமக்குள் இருக்கும் வேறுபாடுகளை, சண்டை சச்சரவுகளை களைய வேண்டும். தேர்தலில் நம்முடைய இலக்கு 200 தொகுதிகளுக்கும் மேல் வெற்றியடைய வேண்டும் என்பதாக இருக்க வேண்டும். 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்று திமுகவை ஆட்சிக் கட்டிலில் அமர வைக்க வேண்டும். தேர்தல் எப்போது வந்தாலும் அதில் வெற்றி பெற வேண்டும் என்பதில் முனைப்புடன் இருக்க வேண்டும்.கிராம சபைக் கூட்டங்கள் முடிந்த பிறகு அனைத்து மாவட்டங்களுக்கும் நேரில் செல்லவுள்ளேன் என்றார் ஸ்டாலின்


Top