logo
நூறு நாள் வேலைத்திட்டத் தொழிலாளர்களை சாதி வாரியாகப் பிரிக்கும் முயற்சியைக் கண்டித்து  அஇவிதொச- தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் (ஜூன்21) ஆர்ப்பாட்டம்

நூறு நாள் வேலைத்திட்டத் தொழிலாளர்களை சாதி வாரியாகப் பிரிக்கும் முயற்சியைக் கண்டித்து அஇவிதொச- தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் (ஜூன்21) ஆர்ப்பாட்டம்

20/Jun/2021 08:16:41

புதுக்கோட்டை, ஜூன்:மகாத்மா காந்தி ஊரக வேலைத் திட்டத் தொழிலாளர்களை சட்டத்துக்குப் புறம்பான வகையில் சாதி வாரியாகப் பிரிக்க முயற்சிக்கும் ஒன்றிய அரசும்- ஊரக வளர்ச்சித் துறையையும் கண்டித்து அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம்தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் திங்கள்கிழமை(ஜூன்.21)புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் அருகில்   காலை 10 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் மாநில பொருளாளர்   எஸ்.சங்கர் தெரிவித்த தகவல்:

மகாத்மா காந்தி ஊரக வேலைத் திட்டத் தொழிலாளர்களை சட்டத்துக்குப் புறம்பான வகையில் சாதியாகப் பிரித்து - செயல்படுத்திட ஒன்றிய அரசின் ஊரக வளர்ச்சித் துறை அனைத்து மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் அனுப்பியுள்ள கடிதத்தில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் ஊதியப் பட்டுவாடாவையும், வேலைஅளிக்கும் முறையிலும்  பட்ஜெட் தயாரிப்பதற்கு தனித்தனியாக பட்டியல் சாதியினர், பழங்குடியினர் மற்றும் இதர சாதிவாரியான பட்டியலைக் கேட்டுள்ளது.

 ஒன்றிய அரசின் இந்த நடவடிக்கை தொழிலாளர்களை சாதிய ரீதியாகப் பிரிப்பதற்கும், நிதி ஒதுக்கீடு தனியாக செய்வதற்குமான ஏற்பாடாகும். ஒன்றிய அரசின் இந்த உழைப்பாளர் விரோத நடவடிக்கையை அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கமும் - தீண்டாமை ஒழிப்பு முன்னணியும் வன்மையாகக் கண்டிக்கிறது. இந்த அறிவிக்கையை உடனடியாக திரும்பப்பெற வேண்டுமென வலியுறுத்துகிறோம்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டத்தில் வேலை வழங்குவதையும் - கூலி வழங்குவதையும் சாதிரீதியாகப் பிரிப்பது சமூகத்தில் மேலும்  பிரச்னைகளை உருவாக்கும் நடவடிக்கையாகும். தொழிலாளர்களை பகுதி பகுதியாகப் பிரித்து - கூலி வழங்குவதன் மூலம் அனைவருக்கும் சம கூலி கிடைத்திட உத்தரவாதமற்ற நிலையையும், தாமதமின்றி ஒரே நேரத்தில் ஊதிய பட்டுவாடா செய்வதிலும் குழப்பங்கள் உருவாக்கிட வழிவகுக்கும்.

ஒன்றிய அரசின் இந்த ஆலோசனை ஊரக வேலை திட்டத்தின் அடிப்படை நோக்கத்துக்கும்-சமகூலி சட்டத்துக்கும் எதிரானதுடன், பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியின தொழிலாளர்களின் உரிமையை மறுக்கும் செயலாகும். அனைவருக்குமான நிதி செலவினக் கோட்பாட்டை மறந்து, புதிய பாகுபாட்டுடன் கூடிய நடைமுறையை செயல்படுத்துவதை ஒன்றிய அரசு கைவிடவேண்டும். 

கிராமப்புறப் பொருளாதாரம் நொறுங்கி துயரத்தில் தள்ளாடும் கிராமப்புற ஏழைகளை பாதுகாக்க 200 நாட்கள் வேலையும், தினக்கூலி ரூபாய் 600 ஆகவும் உயர்த்தி வழங்கிட வேண்டும். தாமதமின்றி ஊதியம் வழங்கிட வேண்டும்.

இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கமும்தீண்டாமை ஒழிப்பு முன்னணியும் நாளை( ஜூன் 21 திங்கட்கிழமை) கொரோனா கால விதிமுறைகளைப் பின்பற்றி நாடு தழுவிய  கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

 

  .

Top