29/Mar/2021 11:19:56
ஈரோடு, மார்ச்: ஈரோடு மாநகராட்சியின் புறநகர் பகுதியில் புறநகரில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கப்படும் என்று தி.மு.க. வேட்பாளர் முத்துசாமி உறுதியளித்தார்.
ஈரோடு மேற்கு தொகுதி தி.மு.க., வேட்பாளர் சு.முத்தசாமி, சென்னிமலைபாளையம், கொளத்துப்பாளையம், செம்பாண்டாம்பாளையம், செல்லப்பம்பாளையம், மண்ணாங்காட்டுவலசு, கே.கே.வலசு, ஆண்டிக்காடு, ஓலப்பாளையம் பகுதியில், வாக்காளர்களிடம் உதய சூரியன் சின்னத்துக்கு வாக்கு சேகரித்தார்.
வாக்காளர்களிடம், சு.முத்துசாமி பேசியதாவது: ஈரோடு மாநகராட்சிக்கு அப்பால், புறநகர் பகுதியில் அதிமுக ஆட்சியில் எவ்வித மேம்பாட்டு பணி, திட்டங்கள் செயல்படுத்தவில்லை. அடிப்படை வசதிகளுக்கு முக்கியத்துவம் தரப்படும். விலைவாசி உயர்வால் பாதிக்கும் மக்களுக்காக, தி.மு.க. தலைவர் ஸ்டாலின், பல்வேறு திட்டங்கள், உதவிகளை தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
மேற்கு தொகுதியில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் வகையில், புறநகர பகுதிகள் மாநகராட்சியுடன் இணைத்து, வளர்ச்சி திட்டங்கள் கொண்டு வரப்படும். புறநகரில் அதிக மக்கள் வசிக்கும் பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையமும், மாநகராட்சிக்குள் நகர்ப்புற சுகாதார மையங்களும் ஏற்படுத்தப்படும். அங்கு போதிய டாக்டர், செவிலியர் நியமித்து, அனைத்து மருந்துகளும் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
சாலை கட்டமைப்பு வலுப்படுத்த, மேம்பாலம் கட்டித்தரப்படும். புறநகரில் பொழுது போக்கு பூங்கா, குழந்தைகளின் கல்வி வளர்ச்சிக்கான நுாலகம் பிற பணிகள் ஏற்படுத்தப்படும். இவற்றை செயல்படுத்த என்னை வெற்றி பெற செய்யுங்கள் என்றார் சு. முத்துசாமி.
பின்னர், வெள்ளமுத்துகவுண்டன்வலசு, கொளத்துப்பாளையம், ஹவுசிங் யூனிட், குமரன் நகர், உருமாண்டம்பாளையம், மோளக்கவுண்டன்பாளையம் போன்ற பகுதிகளில் உதய சூரியன் சின்னத்துக்கு ஓட்டு சேகரித்தார்.