03/Apr/2021 07:50:23
ஈரோடு, ஏப்: ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் திருமகன் ஈவெரா, கூட்டணி கட்சியினருடன் இணைந்து, ராஜாஜிபுரம், ஜானகி அம்மாள் லே–அவுட், வரகப்பா தெரு, குப்பைக்காடு போன்ற பகுதிகளில் கை சின்னத்துக்கு வாக்கு சேகரித்தார்.
பொதுமக்களிடம் வேட்பாளர் திருமகன் ஈவெரா பேசியதாவது: மாநகர பகுதியில், இப்பகுதியில் உள்ளவர்களுக்குத்தான் சொந்த வீடு, சொந்த நிலம் இல்லாமல் ஏழ்மை நிலையில் வசிக்கின்றனர். சிலர் அரசு புறம்போக்கிலும், நீர் நிலைகளிலும், மாசுபாடான சூழ்நிலையில் வசிக்கின்றனர்.
கூலி தொழிலாளர்களாக உள்ளதால், குடிசை மாற்று வாரியம் வீடு, வீட்டு வசதி வாரிய வீடுகளுக்கு தங்களது பயனாளி பங்குத்தொகையைக்கூட செலுத்த முடியாத நிலையில் உள்ளனர். எனவே, இங்குள்ளவர்கள் நல்ல சூற்றுச்சூழலில், சொந்த வீட்டில் வாழும் வகையில் நடவடிக்கை எடுப்பேன்.வீடு ஒதுக்கீடு பெற்று, பயனாளி பங்குத்தொகை செலுத்த முடியாதவர் களுக்கு அரசு, வங்கி மூலம் கடனுதவிக்கு வழி செய்து, சொந்த வீடு கிடைக்க நடவடிக்கை எடுப்பேன்.
இப்பகுதியில் முழுமையான சுகாதாரமான நிலையை ஏற்படுத்துவதுடன், இப்பகுதியில் தரமான சாலை, குடிநீர் வசதி, சமுதாய கூடம், பொது கழிப்பிடம் போன்ற வசதிகளை ஏற்படுத்தித் தருவேன்.இவற்றை செயல்படுத்த எனக்கு கை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்யுங்கள். இவ்வாறு பேசினார்.