logo
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த மாதம் நடைபெற இருந்த நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் ரத்து

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த மாதம் நடைபெற இருந்த நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் ரத்து

16/Dec/2020 10:32:21

புதுதில்லி- டிச:  கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த மாதம் நடைபெற இருந்த நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் ரத்து செய்யப்படுவதாக நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மத்திய அரசின் 3 புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி தில்லியை முற்றுகையிட்டுள்ள பஞ்சாப், அரியானா உள்ளிட்ட மாநில விவசாயிகள் இன்று 20-–வது நாளாக போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். சிங்கு, திக்ரி, காஜிப்பூர் என தில்லியின் எல்லை பகுதிகளில் இருந்தும் திரண்டிருக்கும் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் தில்லியில் குவிந்துள்ளனர்.

சர்ச்சைக்குரிய இந்த புதிய வேளாண் சட்டங்கள் குறித்து விவாதிக்க குளிர் கால கூட்டத்தொடரை கூட்டக்கோரி காங்கிரஸ் மக்களவைத் தலைவரான ஆதிர் ரஞ்சன் சவுத்ரி பாராளுமன்ற விவகார அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷிக்கு கடிதம் எழுதினார். இதற்கு பாராளுமன்ற விவகார அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி எழுதிய பதில் கடிதத்தில், அனைத்து அரசியல் கட்சிகளும் கொரோனா பரவலை தவிர்ப்பதற்காக அமர்வை ரத்து செய்வதற்கும், ஜனவரி மாதம் பட்ஜெட் அமர்வை நேரடியாக கூட்டுதவற்கும் ஆதரவு தெரிவித்து உள்ளன என்று கூறியுள்ளார்.

மேலும், தற்போது, நாம் டிசம்பர் 2-ஆவது வாரத்தில் இருக்கிறோம், கொரோனா தடுப்பூசி மிக விரைவில் எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக, நான் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களை தொடர்பு கொண்டு பேசினேன், மேலும் அவர்கள் தொற்றுநோய் பரவல் குறித்து தங்கள் கவலைகளை வெளிப்படுத்தியுள்ளனர். பாராளுமன்றத்தின் அடுத்த கூட்டத்தை விரைவாக நடத்த அரசாங்கம் தயாராக உள்ளது. ஆனால் கொரோனா தொற்றுநோய் உருவாக்கிய முன்னோடியில்லாத சூழ்நிலைகளை மனதில் வைத்து ஜனவரி மாதம் 2021 பட்ஜெட் அமர்வு நடத்தப்படுவது பொருத்தமானது. நேர்மையான நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதற்கு ஒத்துழைக்க வேண்டும் என  தன் பதிலில் கேட்டுக்கொண்டுள்ளார்.

   


Top