logo
சேலம் - சென்னை 8 வழிச்சாலைத் திட்டத்துக்கு விதித்த தடை செல்லும்: உச்ச நீதிமன்றம்

சேலம் - சென்னை 8 வழிச்சாலைத் திட்டத்துக்கு விதித்த தடை செல்லும்: உச்ச நீதிமன்றம்

08/Dec/2020 07:09:02

புது தில்லி:  சேலம் - சென்னை இடையிலான  8 வழிச்சாலை திட்டம் தொடர்பாக உயர் நீதிமன்றம் பிறப்பித்த தடை செல்லும் என்று உச்ச நீதிமன்றம் (டிச.8) இன்று தீர்ப்பளித்துள்ளது.

எட்டு வழிச் சாலை திட்டத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த தடை உத்தரவை எதிர்த்து சேலம் - சென்னை சாலை திட்ட இயக்குநர் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் இன்று இந்த தீர்ப்பு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்ற நீதிபதி கான்வில்கர் தலைமையிலான அமர்வு பிறப்பித்த தீர்ப்பின் விவரம்:

 சேலம் - சென்னை  8  வழிச்சாலைத் திட்டத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த தடை உத்தரவை எதிர்த்து, திட்ட இயக்குநர் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்வதாக உத்தரவிட்டுள்ளது.புதிய அறிவிப்பாணையை வெளியிட்டு 8 வழிச் சாலை திட்டத்தை தொடரலாம் என்றும், புதிய சாலைகள் அமைக்க மத்திய அரசுக்கும் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்துக்கும் அதிகாரம் உள்ளது என்றும் உச்ச நீதிமன்றம் தங்களது உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.

சேலம் - சென்னை 8 வழிச் சாலைத் திட்டத்துக்கு நிலங்களை எல்லாம் கையகப்படுத்தி, திட்டத்தை செயல்படுத்திய பிறகு, இந்த திட்டத்தினால் சுற்றுச்சூழலுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்படும் என்று சுற்றுச்சூழல் துறை குறிப்பிட்டுக் காட்டினால் எப்போது இந்த திட்டத்தை எவ்வாறு தொடர்வீர்கள் என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பியிருந்தார்கள்.புதிய திட்டங்களுக்கு சுற்றுச்சூழல் துறையின் முன் அனுமதி அவசியம் என்பதை உறுதி செய்திருக்கும் உச்ச நீதிமன்றம் எட்டு வழிச் சாலைத் திட்டத்துக்கு தனியார் நிலத்தை அரசு நிலமாக கையகப்படுத்தவும் தடை விதித்துள்ளது.

சேலம் - சென்னை 8 வழிச்சாலைத் திட்டத்துக்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் கடந்த ஆண்டு உத்தரவிட்டது. சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், சேலம் - சென்னை 8 வழிச்சாலை திட்டத்துக்காக நிலங்களை கையகப்படுத்த தமிழக அரசு பிறப்பித்த அறிவிப்பாணையை 2019 -ஆம் ஆண்டு ஏப்ரல் 8-ஆம் தேதி ரத்து செய்தது. மேலும், இந்த திட்டத்துக்காக பொதுமக்களிடமிருந்து கையகப்படுத்தப்பட்டுள்ள நிலங்களை 8  வாரத்துக்குள் திருப்பிக் கொடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தது.

உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தேசிய நெடுஞ்சாலை துறையின் சார்பில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், வழக்கை தள்ளுபடி செய்துள்ளது. விசாரணையின் போது, இந்த திட்டத்துக்கு ரூ.10 ஆயிரம் கோடி அளவுக்கு செலவிடப்படுகிறது.

 8 வழிச்சாலை திட்டம் செயல்படுத்தப்பட்டால், சென்னை - சேலம், சென்னை - மதுரை இடையே செல்லும் போக்குவரத்துத் தொலைவு குறையும், இதனால் எரிபொருள் மிச்சப்படும் என்று திட்ட இயக்குநர் தரப்பில் வாதங்கள் முன் வைக்கப்பட்டன. ஆனால், எல்லாவற்றையும் விட நிலத்தின் உரிமையாளர்களான பொதுமக்களின் கருத்தும், சுற்றுச்சூழல் துறையின் அனுமதியும் மிகவும் முக்கியம் என்று நீதிபதிகள் கூறியிருந்தனர்.

 


Top