logo
சாதிவாரி புள்ளிவிவரங்களை சேகரிக்க  ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஆணையம்: முதல்வர் அறிவிப்பு

சாதிவாரி புள்ளிவிவரங்களை சேகரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஆணையம்: முதல்வர் அறிவிப்பு

07/Dec/2020 04:07:57

சென்னை: தமிழகத்தில் சாதிவாரி புள்ளிவிவரங்களை சேகரிக்க ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி குலசேகரன் தலைமையில் ஆணையம் அமைக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில்,  தமிழ்நாட்டில் பல்வேறு அரசியல் கட்சிகளும், சமுதாய அமைப்புகளும் சாதி வாரியான கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என பல்வேறு காலக்கட்டங்களில் வைத்து வரும் கோரிக்கைகளின் அடிப்படையிலும், அரசின் பல்வேறு நலத்திட்ட பயன் அனைத்து பிரிவினருக்கும் சென்றடைவதை உறுதிப்படுத்த வேண்டியும்.

உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள 69 சதவீத இட ஒதுக்கீடு சம்பந்தமான வழக்குகளை எதிர்கொள்ளத் தேவையான புள்ளி விவரங்களை பெறுவதற்காகவும், தற்போதைய நிலவரப்படியான சாதி வாரியான புள்ளி விவரங்களை சேகரிக்கும் வழிமுறைகளை ஆராய்ந்து, அதன் அடிப்படையில் உரிய தரவுகளை சேகரித்து, அறிக்கை சமர்ப்பிக்க அதற்கென பிரத்யேக ஆணையம் ஒன்று அமைக்கப்படும் என கடந்த 1.12.2020 -இல் தமிழக அரசால் உத்தரவிடப்பட்டது.

இந்த உத்தரவைத் தொடர்ந்து தற்போதைய நிலவரப்படி சாதிவாரியான அளவிடக்கூடிய முழுமையான புள்ளி விவரங்களை சேகரிக்கும் வழிமுறைகளை முடிவு செய்து, அப்புள்ளி விவரங்களைத் திரட்டி அரசுக்கு அறிக்கை அளிக்க ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் குலசேகரனின் தலைமையில் ஆணையம் அமைக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த ஆணையம் உடனடியாக செயல்பாட்டுக்கு வருவதோடு விரைவில் அதன் பணியையும் துவக்கும்.

சமூக நீதி காத்த வீராங்கனை அம்மா வழியில் செயல்படும், இவ்வரசு சமூக நீதியை நிலைநாட்ட அனைத்து நடவடிக்கைகளையும் தொடர்ந்து எடுக்கும் என்பதை தெரிவித்துக் கொள்வதாக அதில் முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.  

 


Top