logo
நவ. 26-இல் பொது வேலை நிறுத்த அறிவிப்பு: அரசு ஊழியா்கள்  விடுப்பு எடுக்கத்தடை

நவ. 26-இல் பொது வேலை நிறுத்த அறிவிப்பு: அரசு ஊழியா்கள் விடுப்பு எடுக்கத்தடை

24/Nov/2020 12:30:42

சென்னை: மத்திய அரசு ஊழியா் சங்கங்கள் உள்ளிட்ட இதர சங்கங்கள் அறிவித்துள்ள பொது வேலை நிறுத்த அறிவிப்பு காரணமாக, தமிழக அரசு ஊழியா்களுக்கு வரும் 26-இல் விடுப்பு ஏதும் அளிக்கப்பட மாட்டாது என தலைமைச் செயலாளா் க.சண்முகம் உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து, அனைத்துத் துறை செயலாளா்கள், துறைத் தலைவா்கள், மாவட்ட ஆட்சியா்களுக்கு அனுப்பிய உத்தரவு விவரம்:

மத்திய ஊழியா் சங்கங்கள் மற்றும் பணியாளா் சங்கங்களைச் சோ்ந்தவா்கள் தங்களது கோரிக்கைகளை முன்வைத்து வரும் 26-ஆம் தேதி நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளனா். இப் போராட்டத்தில் பங்கேற்பதோ அல்லது பங்கேற்பதாக அச்சுறுத்துவதோ தமிழ்நாடு அரசு ஊழியா்கள் நடத்தை விதிகளின் பிரிவுகளுக்கு எதிரானதாகும்.

இந்த விதிகளை மீறுவோா் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். பொது வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ள வரும் 26-ஆம் தேதி, அரசு ஊழியா் எவரேனும் அலுவலகத்துக்கு வராமல் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றால் அவா்களுக்கு அன்றைய தினம் ஊதியம் அளிக்கப்படாது. மேலும், அன்றைய தினத்தில் மருத்துவ விடுப்பைத் தவிா்த்து, பிற விடுப்புகள் எதற்கும் அனுமதியில்லை.

வேலை நிறுத்தப் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ள தினத்தன்று, ஊழியா்களின் வருகைப் பதிவேடு தொடா்பான விவரங்கள் அடங்கிய அறிக்கையை துறைத் தலைவா்கள் அரசுக்கு அனுப்பி வைக்க வேண்டும். தலைமைச் செயலகத்தைச் சோ்ந்த ஊழியா்களது பதிவேட்டை தனியாக அனுப்பிட வேண்டும்.

Top