logo
தமிழகத்துக்கு காங்கிரஸ்-  தி.மு.க கூட்டணி ஆட்சியில் செய்ததை பட்டியலிடத் தயாரா-அமித்ஷா சவால்

தமிழகத்துக்கு காங்கிரஸ்- தி.மு.க கூட்டணி ஆட்சியில் செய்ததை பட்டியலிடத் தயாரா-அமித்ஷா சவால்

22/Nov/2020 02:57:26

சென்னை: காங்கிரஸ் கூட்டணியில் 10 ஆண்டுகள் இருந்தபோது, தமிழ்நாட்டுக்கு கொண்டுவந்த திட்டங்களை தி.மு.க. பட்டியலிட தயாரா? என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சவால் விடுத்தார்.

தமிழகத்தில் ரூ.67 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியபிறகு  மத்திய அமைச்சர் அமித்ஷா பேசியதாவது:

மத்தியில் நரேந்திர மோடி அரசு பொறுப்பேற்ற பிறகு, ஊழல், குடும்ப ஆட்சி, ஜாதிய அரசியல் என்ற மூன்றினை எதிர்த்து செயல்பட்டு வருகிறது. தமிழகத்திலும், நாட்டின் பிற பகுதிகளிலும் சில கட்சிகள் குடும்ப அரசியலை நடத்தி வருகின்றன. பிற மாநிலங்களைச் சேர்ந்த மக்கள், அங்குள்ள கட்சிகள் நடத்தும் குடும்ப, வாரிசு அரசியலுக்கு எதிராக சரியான பாடத்தைப் புகட்டியுள்ளனர். தமிழகத்திலும் அதுபோன்ற பாடம் புகட்டப்படும். மக்களின் துணை கொண்டு வாரிசு அரசியலுக்கு முடிவு கட்டப்படும்.

தி.மு.க.வுக்கு சவால்:  தி.மு.க - காங்கிரஸ் கட்சி தலைவர்கள் அடிக்கடி தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு அநீதி இழைத்துள்ளது என்று கூறுகிறார்கள். நான் சென்னைக்கு வந்திருக்கிறேன், அவர்களிடம் ஒரு கேள்வி கேட்க வேண்டும். 10 ஆண்டுகாலம் மத்திய அரசில் நீங்கள் அங்கம் வகித்தீர்கள். நீங்கள் இதுவரை தமிழ்நாட்டிற்கு என்ன செய்து இருக்கிறீர்கள் என்பதை பட்டியலிடுங்கள். ஒரு முச்சந்தியில் நின்று கொண்டு தமிழகத்துக்குச் செய்த நன்மைகளைப் பட்டியலாக வைத்திட நான் தயாராக இருக்கிறேன். நீங்கள் அதற்கு பதில் கொடுக்க தயாரா.

ஒரே ஒரு புள்ளி விவரம் மட்டும் இங்கே அளிக்க விரும்புகிறேன். 2013–2014-ஆம் நிதியாண்டுக்கான வரவு– செலவு திட்ட அறிக்கையிலே தமிழகத்திற்கு காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசுரூ.16 ஆயிரத்து 155 கோடியை ஒதுக்கீடு செய்தது. கடந்த வரவு–செலவு திட்டத்திலேயேரூ.35 ஆயிரத்து 850 கோடியை நாங்கள் ஒதுக்கியிருக்கிறோம். வேறு சிலதிட்டங்களுக்கு தனியாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக தமிழ்நாட்டிற்கு ரூ.4,500 கோடி கொடுக்கப்பட்டுள்ளது. 108 டன் அளவிலான உணவு தானியங்கள் கடந்த 4 மாதங்களிலேயே வழங்கப்பட்டுள்ளது. ரூ.3.36 கோடி அளவிலான பருப்பு வகைகள் இதே காலக்கட்டத்தில் வழங்கப்பட்டுள்ளது. 1.83 கோடி பேரின் ஜன்தன் கணக்கில் ரூ.9.01 ஆயிரம் கோடி பரிவர்த்தனைகள் நடந்துள்ளது. மிழகத்தில் தொழில் வளர்ச்சி, ஏழைகளின் நலன் உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசுக்கு தோளோடு தோள் நின்று உறுதுணையாக இருப்போம்.

ஊழலுக்கு எதிராக தி.மு.க. பேசலாமா: நாட்டிலேயே 2 இடங்களில் உத்தரபிரதேசம், தமிழ்நாட்டில் பாதுகாப்பு வளாகம் அமைக்கப்பட்டுள்ளது. சாகர்மாலா திட்டத்தின்படி ரூ.2.25 லட்சம் கோடி, துறைமுகத்திற்குரூ.1 கோடியே 35 ஆயிரமும், சாலைகளுக்காக ரூ.57 ஆயிரம் கோடியும் அளிக்கப்பட்டுள்ளது. மதுரையில் ரூ.12 ஆயிரத்து 460 கோடி செலவில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. தேஜஸ் எக்ஸ்பிரஸ் ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் அடிப்படையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. சென்டிரல் ரெயில் நிலையத்திற்கு எம்.ஜி.ஆர். பெயர் சூட்டப்பட்டுள்ளது.

ஒரு விஷயம் ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. காங்கிரஸ்–தி.மு.க. கூட்டணி ஆட்சியில் 2ஜி அலைக்கற்றை உள்பட பல்வேறு ஊழல்களை செய்தார்கள். ஆனால், இன்று ஊழலுக்கு எதிராக பேசுகிறார்கள். ஊழலுக்கு எதிராக பேச அவர்களுக்கு என்ன அருகதை இருக்கிறது. ஊழல் குற்றச்சாட்டை நீங்கள் வைப்பதற்கு முன்பாக தயவுசெய்து உங்கள் குடும்பத்தை சற்று திரும்பி பாருங்கள். 

அதற்கு பிறகு எது ஊழல், எது ஊழல் இல்லை என்பது உங்களுக்கு தெரியும்.ஏழைகளின் நலனில் மோடி அரசு கவனம் செலுத்துகிறது. தமிழக மீனவர்கள் இன்றைக்கு அச்சம் இல்லாமல் இருக்கிறார்கள். ஒருவருக்குக்கூட பாதிப்பு என்று வந்து கேட்கவில்லை. உலக நாடுகள் இந்தியாவை பார்க்கும் கண்ணோட்டத்தையே மோடி மாற்றி அமைத்து இருக்கிறார். இலங்கை யாழ்ப்பாணத்தில் 50 லட்சம் தமிழர்களுக்கு வீடு கட்டி கொடுத்தார். மோடியால் இந்தியாவிற்கு நன் மதிப்பு ஏற்பட்டுள்ளது. மோடி ஆட்சியில் இந்தியா பாதுகாப்பாக இருக்கிறது.

நம்முடைய பாதுகாப்பு படையினர் சதிவேலையில் ஈடுபட முயன்ற தீவிரவாதிகளை சுட்டுக்கொன்றார்கள். மோடி அரசு பாதுகாப்பு படையினரின் தன்னம்பிக்கையை அதிகரித்து இருக்கிறது. அவர்களுக்கு தலை வணங்குகிறேன். இந்தியா மோடி தலைமையில் வீர நடைபோடுகிறது. வரும் காலங்களில் முன்னணி நாடுகளில் நாம் இருப்போம் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. சிறப்பான திட்டங்களை நிறைவேற்றி கொண்டிருக்கும் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வத்திற்கு மீண்டும் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன் இவ்வாறு அவர் பேசினார். 

                                                   

        


Top