logo
பெருந்துறை ஒன்றியத்திற்கு ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ்  ரூ.12 கோடி ஒதுக்கீடு: முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலம்

பெருந்துறை ஒன்றியத்திற்கு ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் ரூ.12 கோடி ஒதுக்கீடு: முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலம்

31/Oct/2020 04:15:39

ஈரோடு:  மத்திய அரசின் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் வீட்டுக்கு வீடு குடிநீர் இணைப்பு வழங்க பெருந்துறை ஒன்றியத்திற்கு அரசு ரூ.12 கோடி ஒதுக்கியுள்ளது என்று பெருந்துறை எம்எல்ஏவும் முன்னாள் அமைச்சருமான  தோப்பு வெங்கடாசலம் தெரிவித்தார்.

பெருந்துறை அடுத்த வாவிகடை பகுதியில் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தில் வீடுகளுக்கு குடிநீர் வழங்கும் பணிகளை  இன்று  அவர் துவக்கி வைத்து பேசியதாவது:

முன்பெல்லாம் 10 வீடுகளுக்கு ஒரு  குடிநீர் இணைப்பு வழங்கப்படும். ஆனால்  தற்போது அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்க அரசு திட்டமிட்டு செயல்படுகிறது. மேலும், ஒரு தனி நபருக்கு ஒரு நாளைக்கு 45 லிட்டர் தண்ணீர் வழங்குவது என்பதை மாற்றி தற்போது 90 லிட்டர் வழங்குவதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தேவைப்பட்டால்  அதற்கும் மேலாக கூடுதல் தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.


பெருந்துறை. தொகுதியை பொறுத்தவரை குடிநீர் தட்டுப்பாடு உள்ள பகுதி என்கிற நிலைமை தற்போது  மாறிவிட்டது. மேலும், அடுத்த 40 ஆண்டுகளுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படக்கூடாது என்பதற்காக அரசு கொடிவேரியில் இருந்து பவானி ஆற்று நீரை ரூ. 247 கோடி மதிப்பீட்டில் பெருந்துறை தொகுதி முழுவதும் வழங்க திட்டமிட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதேபோன்று, ஈரோடு மாநகராட்சி பகுதியில் ரூ.540 கோடி மதிப்பில் ஊராட்சிகோட்டை குடிநீர் திட்ட பணிகள் நடந்து நடந்து வருகின்றன. மாவட்ட ஆட்சியர் இரண்டு பணிகளையும் துரிதப்படுத்தியுள்ளதால் வரும் டிசம்பருக்குள் கொடிவேரி கூட்டு குடிநீர் திட்டப் பணிகள் நிறைவடையும்.  இதனால் எப்போதுமே தண்ணீர் பஞ்சம் இல்லாத தொகுதியாக பெருந்துறை திகழும்.

ஈரோடு மாவட்டத்தில் மன்னர் காலிங்கராயர் தனது சொந்தச்செலவில்  காலிங்கராயன் கால்வாய் வெட்டி ஏராளமான நிலங்களுக்கு நீர் பாசன வசதி ஏற்படுத்தினர். தற்போது முதலமைச்சர் இதேபோன்று அத்திக்கடவு-அவிநாசி திட்டத்திற்காக கால்வாய் பணிகளை துவக்கி உள்ளார்.  இதனால் ஏராளமான குளம் குட்டைகள் பவானி ஆற்று நீரால் நிரப்பப்படும். இந்த வாவிகடை பகுதிக்கும் இதனால் பலன் கிடைக்கும். பெருந்துறை பகுதியின் வறட்சி நீங்கும் இவ்வாறு  வளர்ச்சி பணிகளை வேகமாக இந்த அரசு செயல்படுத்தி வருகிறது.

வெங்காயம் தட்டுப்பாடு ஏற்பட்டு விலை உயர்ந்தது என்றதும் நமது முதலமைச்சர் வட நிலங்களில் இருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்து 1 கிலோ ரூ.45  -என்ற அளவில் விற்பனை ஏற்பாடு செய்துள்ளார். அந்த அளவிற்கு மக்கள் நலனை கருத்தில் கொண்டு அதிமுக அரசு திகழ்கிறது இவ்வாறு அவர் பேசினார். இந்நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியர் சி கதிரவன் தலைமை வகித்தார். தொடர்புடைய துறை அதிகாரிகள் மற்றும் அதிமுக நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.

Top