31/Jan/2021 06:55:24
ஈரோடு, ஜன:ஈரோடு மாவட்டத்தின் பெருமையை உணர்த்தும் வகையில் பல்வேறு அடையாள சின்னங்கள் இன்றளவும் கம்பீரமாக காட்சி அளித்து விடுகின்றன. குறிப்பாக வெளியூரில் இருந்து ஈரோடுக்குள் நுழையும் போது காளைமாடு சிலை வீரத்தின் அடையாளமாக கம்பீரமாக நிற்கிறது.
ஈரோடு சென்னிமலை ரோட்டில் ரயில் நிலையம் உள்ளது. இங்கு தினமும் 80 -க்கும் மேற்பட்ட ரயில்கள் இயக்கப்பட்டு வந்தன. கொரோனா தாக்கம் காரணமாக தற்போது குறிப்பிட்ட சில ரெயில்கள் மட்டும சிறப்பு ரயில்கள் என்ற பெயரில் இயக்கப்பட்டு வருகிறது. ஈரோடு ரயில் நிலையத்தை பொருத்தவரை தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் வந்து செல்கிறார்கள்.
ஈரோட்டில் தான் அனைத்து வகையான எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு காவிரி தண்ணீர் நிரப்பப்பட்டு வருகிறது. இதனால் எப்போதும் ஈரோடு ரயில் நிலையம் பரபரப்பாக காட்சியளிக்கும். சேலம் கோட்ட ரயில்வேயில் முக்கிய வருவாயாக ஈரோடு ரயில் நிலையம் உள்ளது. இந்த சம்பவத்தினால் எக்சலேட்டர் , லிப்ட் வசதிகள் செய்யப்பட்டிருந்தது. தற்போது மேலும் ஒரு எக்சலேட்டர் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இவ்வாறு ஈரோடு ரயில் நிலையம் உலகத்தரத்திற்கு மாற்றப்பட்டு வருகிறது.
இந்நிலையில், ரயில் நிலையத்திற்கு முன்பு டீசல் என்ஜின் நிறுத்தி வைக்கப்படும் என்று சேலம் கோட்ட ரெயில்வே மேலாளர் கடந்த சில நாட்கள் முன்பு தெரிவித்திருந்தார். இது ஈரோட்டின் புதிய அடையாளமாக இருக்கும் என்றும் அவர் கூறியிருந்தார். அதனைத் தொடர்ந்து அதற்கான பணிகள் முடுக்கி விடப்பட்டு இருந்தன. இந்நிலையில் ஈரோடு ரயில் நிலையம் முன்பு சனிக்கிழமை இரவு டீசல் பொருத்திய ரயில் என்ஜின் நிறுத்தி வைக்கப்பட்டது.
இதற்காக அங்கு தனி தண்டவாளங்கள் பொருத்தப்பட்டு அதில் டீசல் எஞ்சின் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனை இன்று ஈரோடு ரயில் நிலையத்திற்கு வந்த பயணிகள் பிரம்மிப்பாக பார்த்து சென்றனர். ஒரு சிலர் இந்த ரயில் என்ஜினுடன் உடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். ஈரோட்டில் புதிய அடையாளமான இந்த டீசல் என்ஜினுக்கு பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்