14/Oct/2020 03:16:30
ஈரோடு: செய்தியாளர்களிடம் மோதல் போக்கை கடைபிடித்து வரும் ஈரோடு டவுன் டி.எஸ்.பி ராஜூ மற்றும் தனிபிரிவு உதவி ஆய்வாளர் கணேசன் ஆகியோரைக் கண்டித்து தொடர் போராட்டங்களில் ஈடுபடப் போவதாக ஈரோடு செய்தியாளர்கள் அறிவித்துள்ளனர்.
ஜனநாயகத்தின் நான்காம் தூணாகத் திகழும் ஊடகங்களின் குரல்வளையை நெறிக்கும் செயலில் ஈரோடு காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். ஈரோடு டவுன் டிஎஸ்பி ராஜூ மற்றும் தனிபிரிவு உதவி ஆய்வாளர் கணேசன் ஆகியோர் காவல்துறைக்கு எதிராக எந்தச்செய்தியும் செய்தி வெளியிட கூடாது என்ற சர்வாதிகாரப் போக்கில் ஜனநாயகத்தை மதிக்காமல் செயல்பட்டு வருகின்றனர். அவ்வாறு செய்தி வெளியிட்டால் எஸ்பி அலுவலக வளாகத்தில் செய்தியாளர்கள் பயன்படுத்தி வரும் (பழைய கார் நிறுத்தும் இடம்) அறையைக் காலி செய்ய வேண்டும் என மிரட்டல் விடுத்து வருகின்றனர்.
காவல்துறை உள்பட எந்தத்துறையாக இருந்தாலும் விருப்பு வெறுப்பின்றி தவறுகளைச் சுட்டிகாட்ட வேண்டியதே ஊடகங்களின் அடிப்படைக் கடமை. அந்த கடமையைச் செய்யவிடாமல் தடுப்பது கண்டனத்துக்குரியது.
எனவே, ஈரோடு டவுன் டிஎஸ்பி ராஜூ மற்றும் தனிபிரிவு உதவி ஆய்வாளர் கணேசன் ஆகியோரின் ஜனநாயகவிரோத, பத்திரிகையாளர் விரோதப் போக்கைக் கண்டித்து தொடர் போராட்டங்களை நடத்த ஈரோடு செய்தியாளர்கள் தரப்பில் முடிவு செய்யப்பட்டது.
அதில்,முதல்கட்டமாக கறுப்புச் சட்டை அணிந்து பணியாற்றுவது என தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஈரோடு டவுன் டி.எஸ்.பி ராஜூ மற்றும் உதவி ஆய்வாளர் கணேசன் ஆகியோர் பணியிட மாற்றம் செய்யப்படும் வரை தங்களது போராட்டம் தொடரும் எனவும் செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.