12/Oct/2020 01:25:06
ஈரோடு: ஈரோடு மாநகர் பகுதியில் அம்பேத்கருக்கு அரசு சார்பில் முழு உருவ சிலை வைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி புரட்சியாளர் அம்பேத்கர் சிலை அமைப்பு குழுவைச் சேர்ந்த 28 அமைப்பு நிர்வாகிகள் எஸ்பி அலுவலகத்திற்கு வந்து இன்று(12.10.2020) மனு அளித்தனர்.
இதில், திராவிடர் கழகத்தைச் சேர்ந்த அமைப்பு செயலாளர் சண்முகம், விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த மாவட்ட செயலாளர் சிறுத்தை வள்ளுவன், அருந்ததியர் இளைஞர் பேரவை மாநில ஒருங்கிணைப்பாளர் வடிவேல் ராமன், தமிழ் புலிகள் கட்சியின் மத்திய மாவட்ட செயலாளர் சிந்தனைச் செல்வன் உட்பட 28 அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
முன்னதாக, ஈரோட்டில் பெரியார் மன்றத்தில் நேற்று நடந்த அம்பேத்கர் உருவச்சிலை அமைப்பு குழு நிர்வாகிகள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டத்தில், ஈரோட்டில் அம்பேத்கர் உருவச் சிலையை தமிழக அரசு சார்பில் அமைக்க வேண்டும். இந்தக்கோரிக்கையை வலியுறுத்தி ஈரோடு மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்கானிப்பாளர் ஆகியோரை நேரில் சந்தித்து மனு கொடுப்பது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முன்னதாக, சமூக நீதி போராளி மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் மறைவையொட்டி அவரது உருவப்படத்துக்கு நிர்வாகிகள் சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது.