07/Aug/2021 01:02:13
புதுக்கோட்டை, ஆக: தொடக்கல்வி பட்டயத்தேர்வு (செப்டம்பர் 2021) க்கு தனித்தேர்வர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இது தொடர்பாக மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் பெ.நடராஜன் வெளியிட்ட தகவல்:
செப்டம்பர் 2021 -இல் நடைபெறவுள்ள தொடக்கக் கல்வி பட்டயத்தேர்விற்கு தனித்தேர்வர்கள் www.dge.tn.gov.in என்ற இணைய தள வழியாக விண்ணப்பத்தை பூர்த்தி செய்து விண்ணப்பத்துடன் ஏற்கெனவே தேர்வெழுதி தேர்ச்சி பெற்ற மதிப்பெண் சான்றிதழ்களின் அனைத்து நகல்களையும் கண்டிப்பாக இணைத்து தேர்வர் வசிக்கும் மாவட்டத்திற்கு அருகில் அமைந்துள்ள மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் வாயிலாக ஆகஸ்ட் 7 (சனிக்கிழமை) முதல் விண்ணப்பிக்கலாம்.
ஆகஸ்ட் 8 -ஆம் தேதி (ஞாயிறு) விடுமுறை என்பதால் ஆகஸ்ட் 9 ,10,11 ஆகிய தேதிகளில் 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை விண்ணப்பிக்கலாம்.ஆகஸ்ட் 7 முதல் ஆகஸ்ட் 11 வரை செப்டம்பர் 2021 தனித்தேர்வுக்கு விண்ணப்பிக்கத்தவறியவர்கள், சிறப்பு அனுமதி திட்டத்தில் ஆகஸ்ட் 12 -ஆம் தேதி காலை 10 மணி முதல் 5.45 மணி வரை விண்ணப்பிக்க வேண்டும்.இதற்கு அனுமதி கட்டணம் ரூ. 1000 ஆகும்.
மேலும், மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களில் பொருத்தப்பட்டுள்ள (web camera) வழியாக புகைப்படம் எடுக்கும் வசதி செய்யப்பட்டுள்ளதால், அந்நிறுவனங்களிலேயே புகைப்படத்துடன் கூடிய விண்ணப்பங்களை அங்கேயே பதிவேற்றம் செய்து கொள்ள வேண்டும்.
அங்கேயே ஒவ்வொரு பாடத்திற்கும் ரூ. 50. மதிப்பெண் சான்றிதழ்கள் முதலாமாண்டு ரூ 100, இரண்டாமாண்டு ரூ 100, பதிவு மற்றும் சேவைக் கட்டணம. ரூ.15 ,ஆன்லைன் பதிவு கட்டணமாக ரூ .50 செலுத்துமாறும் தனித்தேர்வர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
தகுதியற்ற தேர்வர்களின் விண்ணப்பங்கள் ரத்து செய்யப்படும்.தபால் வழி பெறப்படும் விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும்.தேர்வர்கள் வரும் பொழுது கட்டாயம் முகக் கவசம் அணிந்து வர வேண்டும்.போதிய சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும்.அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.