logo
அரசு, நிதி உதவி பெறும் பள்ளிகளில் அரையாண்டு தேர்வு ரத்து:  பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

அரசு, நிதி உதவி பெறும் பள்ளிகளில் அரையாண்டு தேர்வு ரத்து: பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

16/Dec/2020 01:47:42

ஈரோடு- டிச : அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் அரையாண்டு தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதாக  பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.


ஈரோடு மாவட்ட ஆட்சியர்   அலுவலகத்தில் ஆட்சியர் சி. கதிரவன் தலைமையில்  இன்று (புதன்கிழமைஃ நடைபெற்ற  64-ஆவது தேசிய பள்ளிகள் விளையாட்டு கூட்டமைப்பு போட்டிகளில் பதக்கம் பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு ஊக்கத்தொகை மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் கலந்து கொண்டுவீரர், வீராங்கனைகள்  23  பேருக்கு  ரூ.35.50 லட்சம் ஊக்கத் தொகை வழங்கினார். 

இதையடுத்து, செய்தியாளர்களிடம்  அமைச்சர் செங்கோட்டையன் மேலும் கூறியதாவது:


பள்ளி கல்வித்துறையுடன், விளையாட்டு துறையை மேம்படுத்த தமிழக அரசு, விளையாட்டு வீரர்களுக்கு பொதுத்துறைகளில், 3 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி ஊக்கப்படுத்தி வருகிறது. அனைத்து பஞ்சாயத்து, பேரூராட்சிகளிலும் விளையாட்டு திடல்கள் அமைத்து, அங்குள்ள மாணவ, மாணவியர், இளைஞர்களை ஊக்கப்படுத்த  ரூ.64 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த, 2018-19 -ஆம் ஆண்டில், 64-ஆவது தேசிய பள்ளிகள் விளையாட்டு கூட்டமைப்பு சார்பில் தற்போது 23 மாணவ, மாணவியருக்கு  ரூ.35.50 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்பட்டுள்ளது.

 விளையாட்டு துறையை மேம்படுத்த, 14 வயதுக்கு உள்பட்ட ஆண்கள், பெண்கள், தொழில் நிறுவனங்கள் மூலம் தத்தெடுத்து, அவர்களுக்கு வேண்டிய பயிற்சிகள் வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. விளையாட்டு துறையை மேலும் மேம்படுத்த 24 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. அக்குழு விரைவில் ஆய்வு செய்து, அரசுக்கு வழங்கும் பரிந்துரையின் கீழ், பல்வேறு வளர்ச்சிப்பணிகள் செயல்படுத்தப்படும்.


சுமார், 2,400 அரசு பள்ளிகளில் கழிப்பிட வசதி இல்லை என்று பள்ளி கல்வித்துறை நடத்திய ஆய்வில் தெரியவந்தது. இப்பள்ளிகள், பல ஆண்டுகளுக்கு முன், ஊரகப்பகுதிகளில் கட்டப்பட்டவையாகும். அப்பள்ளிகளிலும், படிப்படியாக கழிப்பிட வசதிகள் ஏற்படுத்தப்படும். ஆனால், புதிதாக கட்டப்படும் அனைத்து பள்ளிகளிலும் கழிப்பிட வசதிகள் ஏற்படுத்தப்படுகின்றன. கொரோனா பிரச்சனை காரணமாக நடப்பாண்டு, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் அரையாண்டு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. 

தனியார் பள்ளிகள் விரும்பினால், ஆன்லைன் மூலம் அரையாண்டு தேர்வினை நடத்தி கொள்ளலாம். கொரோனா பிரச்னைகள் காரணமாக, 9ம் வகுப்பு வரை 50 சதவீத பாடங்கள் குறைக்கப்பட்டுள்ளன. 10,11,12ம் வகுப்பு மாணவ-மாணவிகள் மத்திய, மாநில அரசுகளின் போட்டி தேர்வுகளை எதிர்கொள்வதால், அந்த வகுப்பிற்கு மட்டும் 35 சதவீத பாடங்கள் குறைக்கப்பட்டுள்ளன.

 இதனை முதல்வரை கலந்து ஆலோசித்து பாடத்திட்டங்கள் குறைப்பு குறித்த அறிக்கை வெளியிடப்படும். இரண்டாம் பருவத்துக்கான பாடப்புத்தகங்கள், நோட்டுகள் அனைத்து பள்ளிகளுக்கும் வழங்கப்பட்டுள்ளது. முன்னதாக, அ.தி.மு.க., மாநகர மாவட்டம் சார்பில், ஈரோடு பன்னீர்செல்வம் பூங்காவில், மறைந்த முதல்வர் ஜெயலலிதா சிலையை, மின் துறை அமைச்சர்கள் தங்கமணி திறந்து வைத்தார். இதை தொடர்ந்து மாவட்ட கழக அலுவலகத்தில், மறைந்த முதல்வர்கள் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் உருவச்சிலைகள்  கூட்ட அரங்கு திறந்து வைக்கப்பட்டது.இவ்வாறு அவர் கூறினார். 

இதில், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி. கருப்பணன், எம்எல்ஏ-க்கள் கே.வி. ராமலிங்கம், கே.எஸ். தென்னரசு, சிவசுப்பிரமணி, ராஜா என்ற ராஜாகிருஷ்ணன், மாவட்ட எஸ்பி தங்கதுரை, மாவட்ட விளையாட்டு அலுவலர் சதீஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Top