16/Jul/2021 11:38:50
ஈரோடு, ஜூலை: ஈரோடு மாவட்டத்தில் 17 இடங்களில் நடைபெற்ற தடுப்பூசி முகாம்கள் மூலம் பொது மக்களுக்கு கோவேக்சின் 2-ஆம் தவணை தடுப்பூசி போடப்பட்டது.
ஈரோட்டில் கொரோனா தொற்றில் இருந்து மக்களை பாதுகாக்க தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு தடுப்பூசி போடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. இதன்படி, மாவட்டத்தில் இது வரை 4 லட்சத்து 90 ஆயிரத்துக்கு மேற்பட்ட பொது மக்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். தடுப்பூசி போட்டுக்கொள்ள பொதுமக்கள் அதிகமாக ஆர்வம் காட்டி வருகின்றனர். தடுப்பூசி போடும் முகாம்களில் இரவு முதலே குவிய தொடங்கி விடுகின்றனர். இன்னும் சிலர் இரவிலேயே வந்து இடம் பிடித்து காத்து நிற்கின்றனர்.
இதனால், மக்கள் கூட்டத்தை தவிர்க்கும் வகையிலும், சிரமமின்றி தடுப்பூசி போடுவதற்காகவும் மாவட்ட நிர்வாகம் சார்பில் சுழற்சி முறையில் தடுப்பூசி போடும் பணி கடந்த மாதம் 24-ந் தேதி முதல் தொடங்கி நடந்து வருகிறது. அதன்படி ஈரோட்டில் மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளில் தினசரி சுழற்சி முறையில் தலா 20 வார்டுகளில் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதேபோல் புறநகர்ப் பகுதிகளிலும் தடுப்பூசி போடப்படும் முகாம்கள் அதிகரிக்கப்பட்டிருந்தது. தடுப்பூசிகள் கையிருப்பு தகுந்தார் போல் தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வந்தது.
வியாழக்கிவமை மாவட்டம் முழுவதும் எங்கும் தடுப்பூசி போடவில்லை. இந்நிலையில் வெள்ளிக்கிழமை மாவட்டம் முழுவதும் 17 இடங்களில் கோவேக்சின் 2-ஆம் தவனை தடுப்பூசி மட்டும் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டது.
வழக்கம்போல் இரவு முதலே தடுப்பூசி போடும் மையத்தில் மக்கள் குவியத் தொடங்கிவிட்டனர். ஒவ்வொரு மையத்திலும் முதலில் வந்த 150 பேருக்கு டோக்கன் அடிப்படையில் தடுப்பு ஊசி செலுத்தப்பட்டது. இதனால் மற்றவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
ஈரோடு மாநகர் பகுதியில் நேதாஜி ரோட்டில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம், பி,பி அக்ரஹாரத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம், சூரம்பட்டி வலசில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் கோவேக்சின் 2-ஆம் தவணை தடுப்பூசி மட்டும் செலுத்தப்பட்டது.இந்த மூன்று மையங்களிலும் அதிகாலை முதலே மக்கள் நீண்ட வரிசையில் இடம்பிடித்து வரிசையில் காத்து நின்றனர். எனினும் தடுப்பூசி முதல் தவணை போடப்படாததால் ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றனர்.