logo
ஈரோடு மாநகர் பகுதியில் கொரோனா தாக்கம் தணிந்தது.. கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளும்  சரிந்தது

ஈரோடு மாநகர் பகுதியில் கொரோனா தாக்கம் தணிந்தது.. கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளும் சரிந்தது

30/Jun/2021 10:16:42

ஈரோடு, ஜூன்: ஈரோடு மாநகராட்சிப் பகுதியில் கொரோனா தாக்கம்  குறைந்தால்  கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளும்  சரிந்துள்ளது.

ஈரோடு மாநகர் பகுதியில் முதலில் கொரோனா தாக்கம் அதிகரித்து வந்தது. மக்கள் அடர்த்தி காரணமாக பரவல் வேகமாக பரவியது.பரவலை கட்டுப்படுத்த மாநகராட்சி பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வந்தது.

மாநகராட்சி சார்பில் தினமும் 3 ஆயிரம் கொரோனா பரிசோதனையும், தனியார் ஆஸ்பத்திரியில் தினமும் ஆயிரம் பரிசோதனை என மொத்தம் நாள் ஒன்றுக்கு 4 ஆயிரம் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வந்தது.

இதைப்போல் மாநகராட்சி பகுதியில் உள்ள 1.30 லட்சம் வீடுகளில் வாசிக்கும் மக்களுக்கு காய்ச்சல், சளி, இரும்பல் போன்ற அறிகுறி இருக்கிறதா என்று கண்காணிக்கும் வகையில் மாநகராட்சி சார்பில் 1200 தன்னார்வலர்களும், 200 மாநகராட்சி பணியாளர்கள் நியமிக்கப்பட்டு அவர்கள் தினமும் வீடுவீடாக சென்று சளி காய்ச்சல் குறித்து கணக்கெடுத்து வருகின்றனர்.

இதில் அறிகுறி உள்ளவர்களுக்கு வீடுகளிலேயே சென்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் ஒரே தெருவில் மூன்று வீடுகளுக்கு மேல் பாதிப்பு இருந்தால் அந்தத் தெரு தனிமைப்படுத்தப்பட்டு தடுப்புகள் அமைத்து தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

முதலில் மாநகர் பகுதியில் 45 பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வந்தது. இது போன்ற தடுப்பு நடவடிக்கை காரணமாக தற்போது மாநகர் பகுதியில் தொற்று குறைய தொடங்கியுள்ளது. புதன்கிழமை  ஈரோடு மாவட்டத்தில் மொத்த பாதிப்பில் மாநகர் பகுதியில்  மட்டும் 62 பேருக்கு மட்டுமே தொற்று ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் மா. இளங்கோவன் கூறியதாவது:

மாநகர் பகுதியில் முதலில் கொரோனா தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. பல்வேறு தடுப்பு நடவடிக்கை காரணமாக தற்போது தொற்றின் தாக்கம் குறைந்து வருகிறது. குறிப்பாக தொட்டு ஏற்பட்டவர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு அவர்கள் விரைவாக குணம் அடைந்தனர்.

இதுபோல் வீடு வீடாக சென்று பரிசோதனை செய்ததும் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. முதலில் தினசரி பாதிப்பு 500-க்கு மேல் இருந்தது. ஆனால் நேற்றைய மாநகர் பாதிப்பு வரும் 62 ஆக குறைந்துள்ளது. இதேபோல் முதலில் மாநகர பகுதியில் 45  கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள்  கண்காணிக்கப்பட்டு வந்தது. தற்போது கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் 17 ஆக குறைந் துள்ளது. இருப்பினும் பொது மக்கள் முக கவசம் ,தனிமனித இடைவெளியை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும் என்றார் அவர்.

Top