logo
ஈரோட்டில் ஒரே நாளில் ஊரடங்கை மீறிய 252 பேர் மீது வழக்கு பதிவு:226 வாகனங்கள் பறிமுதல்

ஈரோட்டில் ஒரே நாளில் ஊரடங்கை மீறிய 252 பேர் மீது வழக்கு பதிவு:226 வாகனங்கள் பறிமுதல்

26/Jun/2021 07:48:40

ஈரோடு, ஜூன்: ஈரோடு மாவட்டத்தில்  ஒரே நாளில் ஊரடங்கை மீறிய 252 பேர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்து  226 வாகனங்களை  பறிமுதல் செய்தனர்.

தமிழகத்தில் கொரோனா 2 -ஆவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த வரும் ஜூலை 5-ஆம் தேதி வரை தேதி வரை தளர்வுகள் உடன் கூடிய ஊரடங்கு நீடிக்கப்பட்டு அமல்படுத்தப்பட்டு உள்ளது. ஊரடங்கை மீறி வெளியே சுற்றினால் வாகனங்கள் பறிமுதல் செய்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட  எஸ்பி  சசிமோகன் எச்சரித்திருந்தார்.

32-ஆவது நாளான வெள்ளிக்கிழமை மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்முக கவசம் அணியாமல் வந்த 285 பேருக்கு தலா ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டது. சமூக இடைவெளியை கடைப்பிடிக்காத 12 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு தலா ரூ.500 அபராதம் விதிக்கபட்டது. ஊரடங்கு தடையை மீறி சுற்றியதாக 252 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. மேலும் 222 இருசக்கர வாகனங்களும், 4 நான்கு சக்கர வாகனங்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

ஒரே நாளில்  மட்டும் ரூ.1 லட்சத்து 77 ஆயிரம் அபராதம்  வசூல் செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். போலீசாரின் தீவிர கண்காணிப்பின் காரணமாக வெளியே சுற்றுபவர்கள் எண்ணிக்கை குறைந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இதேபோல் மாநகராட்சி அலுவலர்கள் ஆங்காங்கே முக கவசம் அணியாமல் வருபவர்கள் சமூக இடைவெளி கடைபிடிக் காதவர்களுக்கு அபராதம் விதித்து வருகின்றனர். அதன்படி முக கவசம் அணியாமல் வந்த நூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

தற்போது ஊரடங்கு அமலில் இருப்பதால் குறிப்பிட்ட சில கடைகள் திறக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது எனினும்   சிலர் கடையை திறந்து வைத்து வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவ்வாறு வியாபாரத்தில் ஈடுபடும் நபர்களுக்கு அபராதம் விதித்து  கடைகளும் பூட்டி சீல் வைக்கப்படுகின்றன.

ஈரோடு பொன்னி வீதியில் அனுமதியின்றி இரண்டு நகைக் கடைகள் செயல்பட்டு வருவதாக ஈரோடு மாநகராட்சி நகர்நல அலுவலர் முரளி சங்கருக்கு தகவல் கிடைத்தது. உடனே அந்த பகுதிக்கு மாநகராட்சி அலுவலர்கள் சென்று பார்த்தபோது இரண்டு நகைக் கடைகள் திறந்து  வியாபாரத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதையடுத்து அந்த 2 நகைக்கடைகளுக்கும் ரூ 5,000 அபராதம் விதிக்கப்பட்டு பூட்டி சீல் வைக்கப்பட்டது.

Top