logo
 ரேஷன் கடைகளில் ரூ .2 ஆயிரம் கொரோனா நிவாரண நிதி வழங்கும் பணி : ஈரோட்டில்  அமைச்சர் முத்துசாமி தொடங்கி வைத்தார்

ரேஷன் கடைகளில் ரூ .2 ஆயிரம் கொரோனா நிவாரண நிதி வழங்கும் பணி : ஈரோட்டில் அமைச்சர் முத்துசாமி தொடங்கி வைத்தார்

15/May/2021 09:25:55

ஈரோடு, மே: ரேஷன் கடைகளில் ரூ .2 ஆயிரம் கொரோனா நிவாரண நிதி வழங்கும் பணியை ஈரோட்டில்  அமைச்சர் சு. முத்துசாமி தொடங்கி வைத்தார்.

திமுக தேர்தல் அறிக்கையில், அரிசி கார்டு வைத்துள்ள ரேஷன் கார்டுதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக ரூ.4 ஆயிரம் வழங்கப்படும் என அறிவித்தனர். இத்திட்டம் ஜூன் 3 முதல் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. முதல்வராக மு..ஸ்டாலின் பொறுப்பேற்றதும் இம்மாத இறுதிக்குள் முதல்தவணை தொகையாக, 2,000 ரூபாய் வழங்க உத்தரவிட்டார்.

இதற்கிடையில் கடந்த 10-ஆம் தேதி முதல் 14 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஊரடங்கு நேரத்தில் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்காமல் உதவிடும் வகையில், உடனடியாக, கொரோனா முதற்கட்ட நிவாரணத் தொகை, 2,000 ரூபாய் வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது.

இதன்படி,ஈரோடு மாவட்டத்தில் உள்ள, 1,152 ரேஷன் கடைகளில், 7 லட்சத்து, 13,910 ரேஷன் கார்டுகளுக்கு தலா, 2,000 ரூபாய் வழங்கப்படுகிறது. ஊரடங்கு காலத்திலும் ரேஷன் கடை காலை 8 மணி முதல் 12 மணி வரை செயல்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். தற்போது தொற்று அதிகமாக பரவி வருவதால் மக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்கும் வகையில் டோக்கன் முறையில் நிவாரண தொகை வழங்க முடிவு செய்யப்பட்டது.

அதன்படி கடந்த சில நாட்களாக குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷன் கடை பணியாளர்கள் வீடுகளுக்குச் சென்று டோக்கன் விநியோகித்து வந்தனர். அதில் தொகை பெறுவதற்கான நாள் குறிப்பிடப்பட்டு இருந்தது

ஒரு கடையில் நாள் ஒன்றுக்கு 200 பேர் வந்து நிவாரண தொகை வழங்கும் படி டோக்கன் வினியோகம் செய்யப்பட்டதுஅந்த நாட்களில் அந்த குறிப்பிட்ட பகுதியை சேர்ந்த மக்கள் வந்து நிவாரண தொகையை அரசு அறிவித்துள்ள பாதுகாப்பு வழிமுறைகளுடன் கட்டு செல்லலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

டோக்கன் வினியோகம் செய்யும் பணியும் முடிவடைந்து. இதையொட்டி ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் கொரோனா முதற்கட்ட நிவாரணத் தொகையான ரூ.2 ஆயிரம் வழங்கும் பணி தொடங்கியது.

ஈரோடு மாணிக்கம்பாளையம் ஹவுசிங் யூனிட் பகுதியில் உள்ள ஒரு ரேஷன் கடையில் ரூ 2000 நிவாரணத் தொகை வழங்கும் பணியை வீட்டு வசதித்துறை அமைச்சர் சு. முத்துசாமி தொடங்கி வைத்தார். இதில்,ஆட்சியர்சி. கதிரவன், மாநகராட்சி ஆணையர்மா. இளங்கோவன் உட்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

இதைத்தொடர்ந்து ஈபிபி நகர், தண்ணீர்பந்தல் பாளையம், சித்தோடு, நசியனூர், சாணார்பாளையம் பகுதியில் உள்ள ரேஷன் கடைகளிலும் அமைச்சர் முத்துசாமி நிவாரண தொகை வழங்கும் பணியை தொடங்கிவைத்தார்.

கூட்டம் கூடுவதை தவிர்க்கும் வகையில் ரேஷன் கடைகளில் தடுப்புகள் அமைத்து  சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் வட்டம் போட்டு இருந்தது. அந்த வட்டங்களில் பொதுமக்கள் நின்று நிவாரண தொகையை வாங்கி சென்றனர்.

Top