23/Jun/2021 05:58:21
ஈரோடு, ஜூன்: ஈரோடு மாவட்டத்தில் 76 மையங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்களில் நீண்ட வரிசையில் பொதுமக்கள் காத்திருந்து ஊசி போட்டுக் கொண்டனர்.
ஈரோடு மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தடுப்பூசி போடும் பணி தீவிர படுத்தப்பட்டுள்ளது. மாவட்டத்தில் இதுவரை 3 லட்சத்து
15 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள்
கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டனர். தனியார்
மருத்துவமனைகளில் தடுப்பூசி
போடும் பணி கடந்த 2 மாதங்களுக்கு முன்பே
நிறுத்தப்பட்டுள்ளது.
தற்போது மாவட்டம் முழுவதும் அரசு ஆரம்ப சுகாதார மையங்களில் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. தடுப்பூசிகள் குறைந்த அளவே வருவதால் கையிருப்பு பொறுத்து தடுப்பூசி போடும் பணி நடந்து வருகிறது. கையிருப்பு இல்லாத நாட்களில் தடுப்பூசி போடும் பணி நிறுத்தி வைக்கப்பட்டது.
செவ்வாய்க்கிழமை மாவட்டம் முழுவதும் 76 மையங்களில்
கோவிஷில்டு தடுப்பூசிகள் போடப்பட்டன. அதைத் தொடர்ந்து புதன்கிழமை ஈரோடு மாநகர் பகுதியில் உள்ள 10 ஆரம்ப சுகாதார நிலையங்கள், புறநகர் பகுதியில்
உள்ள 66 மையங்களில் கொரோனா தடுப்பு ஊசியான
கோவேக்சின் செலுத்தப்பட்டது.
ஈரோடு மாநகர் பகுதியில் உள்ள 10 மையங்களில் இன்று தாமதமாகவே தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. புறநகர் பகுதிகளான 66 மையங்களில் வழக்கம்போல் மக்கள் நீண்ட வரிசையில் நின்று சமூக இடைவெளியை கடைப்பிடித்து தடுப்பூசி போட்டுச் சென்றனர்.