02/Feb/2021 07:44:37
ஈரோடு, பிப்: ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் ஒவ்வொரு வாரமும் திங்கள் கிழமை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்று வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் இருந்து பல்வேறு பகுதியில் இருந்து வரும் நூற்றுக்கணக்கான மக்கள் தங்கள் கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை நேரடியாக ஆட்சியரைச் சந்தித்து கொடுத்து வந்தனர்.
இந்நிலையில், கொரோனா தாக்கம் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் மக்கள் நேரடியாக அதிகாரிகளை சந்தித்து மனு கொடுப்பதற்குக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து மனு கொடுக்க வரும் பொதுமக்கள் ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிலில் வைக்கப்பட்டிருந்த புகார் பெட்டியில் தங்களது மனுக்களை போட்டுச் சென்றனர்.
இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா தாக்கம் குறையத் தொடங்கியது. இதையடுத்து அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்து வருகின்றன. அதன்படி தமிழகம் முழுவதும் திங்கள்கிழமை வழக்கம் போல மக்கள் குறை கேட்பு நாள் கூட்டம் நடத்த அனுமதி அளிக்கப்பட்டது.
அதன்படி, ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறை கேட்பு நாள் கூட்டம் நடைபெற்றது. பல்வேறு பகுதியில் இருந்து வந்திருந்த மக்கள் தங்கள் விவரம் குறித்து பதிவு செய்து அதிகாரிகளை நேரடியாக சந்தித்து கோரிக்கை மனுக்களை அளித்தனர். கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளுடன் இக்கூட்டம் நடந்தது. முக கவசம் அணிந்து வர வலியுறுத்தப்பட்டிருந்தனர்