logo
ஈரோடு மாவட்டத்தில்  77 மையங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்: காத்திருந்து தடுப்பூசி போட்டுக்கொண்ட மக்கள்

ஈரோடு மாவட்டத்தில் 77 மையங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்: காத்திருந்து தடுப்பூசி போட்டுக்கொண்ட மக்கள்

22/Jun/2021 11:14:32

ஈரோடு, ஜூன்: ஈரோடு மாவட்டத்தில்  77 மையங்களில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாமில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.

ஈரோடு மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தடுப்பூசி போடும் பணி தீவிர படுத்தப்பட்டுள்ளது. மாவட்டத்தில் இதுவரை 3 லட்சத்து 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர். தனியார் ஆஸ்பத்திரிகளில் தடுப்பூசி போடும் பணி கடந்த 2 மாதங்களுக்கு முன்பே நிறுத்தப்பட்டுள்ளது.

தற்போது மாவட்டம் முழுவதும் அரசு ஆரம்ப சுகாதார மையங்களில் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. தடுப்பூசிகள் குறைந்த அளவே வருவதால் கையிருப்பு பொறுத்து தடுப்பூசி போடும் பணி நடந்து வருகிறது. கையிருப்பு இல்லாத நாட்களில் தடுப்பூசி போடும் பணி நிறுத்தி வைக்கப்பட்டது. நேற்று மாவட்டம் முழுவதும் 76 மையங்களில் கோவிஷில்டு தடுப்பூசிகள் போடப்பட்டன.

அதைத் தொடர்ந்து செவ்வாய்க்கிழமை  ஈரோடு மாநகர் பகுதியில் உள்ள 10 ஆரம்ப சுகாதார நிலையங்கள், புறநகர் பகுதியில் உள்ள 67 மையங்களில் கொரோனா தடுப்பு ஊசி செலுத்தப்பட்டது. வழக்கம்போல் நள்ளிரவு முதலே தடுப்பூசி போடப்படும் மையங்களில் மக்கள் குவியத் தொடங்கினர்.

ஈரோடு வீரப்பன்சத்திரம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில்தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இங்கு நள்ளிரவு முதலே பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று   செருப்பு, குடைகள்,கற்களை போன்றவற்றை  வைத்து இடம்பிடித்து வருகின்றனர். கிட்டத்தட்ட இரண்டு கிலோமீட்டர் தூரம் வரிசையில் நின்றனர்.

முதலில் வந்த 200 பேருக்கு மட்டுமே டோக்கன் அடிப்படையில் தடுப்பூசிகள் போடப்பட்டன. தடுப்பூசி மையங்களின் முன்னெச்சரிக்கையாக  போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது. கருங்கல்பாளையம் காமராஜர் மேல்நிலைப்பள்ளியில் தடுப்பூசி போடும் பணி நடந்தது.

அப்போது ஒலிபெருக்கி மூலம் மக்கள் சமூக இடைவெளி கடைப்பிடித்து முகக்கவசம் அணிந்து  கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. இதைப்போல் கோபி, அந்தியூர், பவானி, பெருந்துறை, சென்னிமலை மொடக்குறிச்சி சத்தியமங்கலம், கவுந்தப்பாடி உள்ளிட்ட புறநகர் பகுதிகளிலும் தடுப்பூசி போடும் பணி நடந்தது. மக்கள் ஆர்வத்துடன் நின்று தடுப்பூசி சேர்த்துக் கொண்டனர்.

Top