logo
குழந்தையுடன் மது வாங்க வந்தவர் கைது.

குழந்தையுடன் மது வாங்க வந்தவர் கைது.

19/Jun/2021 08:15:02

புதுக்கோட்டை மாவட்டம்,  ஆலங்குடி அருகே கைக்குழந்தையுடன் மதுவாங்க வந்தவரை போலீஸார் கைது செய்தனர்.

 கொரோனா தொற்று அதிகமாக இருப்பதால் தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் டாஸ்மாக் மதுபானக் கடைகள் திறக்கப்படவில்லை. அதனால், புதுக்கோட்டை மாவட்டத்தில் எல்லையோர பகுதிகளில் இருக்கும் மதுக்கடைகளில் தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் மதுபானங்களை வாங்கிச்செல்கின்றனர்.

இந்நிலையில், புதுகை-தஞ்சை எல்லையான  புளிச்சங்காடு கைகாட்டியில் உள்ள மதுக்கடைக்கு தஞ்சை மாவட்டம், ஏனாதிகரம்பையைச் சேர்ந்த சங்கர்(33) என்பவர் கடந்தவாரம் குழந்தையை மோட்டார் சைக்கிள் முன்பு அமரவைத்தவாறு மது வாங்க வந்துள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அங்கு பணியில் இருந்த ஊர்காவல்படைக் காவலர் ஒருவர் மோட்டார் சைக்கிளை தடுத்து நிறுத்தியுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த சங்கர் அந்த காவலருடன் வாக்குவாதம் செய்துவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார்.

இதுகுறித்து, வடகாடு போலீஸார் வழக்கு பதிவு செய்து சங்கரை கைது செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

Top