19/Jun/2021 01:42:36
புதுக்கோட்டை, ஜூன்: புதுக்கோட்டை அருகிலுள்ள மேலப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்கள் 7 பேர் தேசிய வருவாய் வழி திறனறித் தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர்.மேலப்பட்டி பள்ளி மாணவர்கள் தொடர்ந்து 8 ஆண்டுகளாக தேசிய வருவாய் வழி திறனறித் தேர்வில் வென்று பள்ளிக்குப் பெருமை சேர்த்துள்ளனர்.
இந்த கல்வியாண்டில், ராஜசேகர், குகணேசன், அருண், கோபிநாத், ஜெயராஜ், பூர்ணலட்சுமி, அனிதா என 7 மாணவ,மாணவிகள் தேர்வு பெற்றுள்ளனர். முன்னதாக, .2013-2014 -ஆம் ஆண்டில் 1 மாணவர், 2014-2015-ஆம் ஆண்டில் 3 மாணவர்கள், 2015-2016-ஆம் ஆண்டில் 2 மாணவர்கள், 2016-2017-ஆம்ஆண்டில் 5 மாணவர்கள், 2017-2018-ஆம்ஆண்டில் 2 மாணவர்கள், 2018-2019 -ஆம் ஆண்டில் 5 மாணவர்கள், 2019 -2020-ஆம் கல்வி ஆண்டில் 5 மாணவர்கள், 2020 -2021 -ஆம் கல்வி ஆண்டில் 7 மாணவர்கள் எனத் தொடர்ந்து 8 ஆண்டுகளாக மேலப்பட்டி மாணவர்கள் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துவருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் (NMMS) தேசிய வருவாய் வழி திறனறித் தேர்வில் தேர்வில் 190 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.தேர்வு பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் மாதம் ரூ.1000 வீதம்அவர்கள் பிளஸ் 2 முடிக்கும் வரை 4 ஆண்டுகளுக்கு உதவித்தொகை கிடைக்கும்.
இந்த NMMS தேர்வு எழுதுவதன் மூலம் 9 -ஆம் வகுப்பு படிக்கும்போது நடத்தப்படும் கிராமப்புற மாணவர்களுக்கான திறனறித் தேர்வு மற்றும் 10-ஆம்வகுப்பு படிக்கும் போது நடைபெறும் NTSE தேர்விலும் கலந்து கொண்டு வெற்றி பெற்று உதவித்தொகை பெற வழிகாட்டியாக அமையும். மேலும் பணியாளர் தேர்வு ஆணையத் தேர்வு (SSC) மற்றும் வங்கிப் பணியாளர் தேர்வு எழுத மாணவர்களுக்கு இது வழிகாட்டியாக அமையும்.
திறனறித் தேர்வில் வெற்றி பெற்ற மேலப்பட்டி அரசுப் பள்ளி மாணவர்களை வட்டாரக் கல்வி அலுவலர் பொன்னழகு , தலைமை ஆசிரியர் சீத்தாலட்சுமி, ஆசிரியர்கள் மகேஸ்வரன், சரவணன், ஜெயந்தி, ஜெயலட்சுமி, இந்திரா மற்றும் பெற்றோர்கள்,கல்வியாளர்கள் பாராட்டினர்.