logo

இன்றைய சிந்தனை(4.11.2020) வாழ்க்கை என்பது ஒரு நேரச் சலுகை..

04/Nov/2020 08:17:19

வாழ்க்கை என்பது ஒரு காலச் சலுகை. அதை நன்றாகப் பயன்படுத்த வேண்டும். ஆம், காலமும், நேரமும் யாருக்காகவும் காத்திருக்காது, காலம் வீணானால் திரும்பக் கிடைக்காது, காலம் பொன் போன்றது போன்ற பழமொழிகள் நாம் நன்கு அறிந்தவை தானே.

காலத்தின் அருமையை உணர்ந்தவர்கள் சாதனையாளர்கள். காலம் நம் அனைவருக்கும் பொதுவானது. கிடைக்கின்ற காலத்தை வீண் பொழுதுபோக்குகளில் செலவழிப்பவர்கள் வாழ்வில் வெற்றி பெற இயலாது.நேரம் என்பது உங்களுக்கு கொடுக்கப்பட்ட ஒரே செல்வம். அந்த செல்வத்தை எப்படி செலவு செய்ய வேண்டுமென்ற உரிமை உங்களுக்குத் தான் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

உங்களுடைய அந்தச் செல்வத்தை மற்றவர்கள் தங்கள் தன்னலத்திற்காகப் பயன்படுத்திக் கொள்ள அனுமதித்து ஏமாந்து விடாதீர்கள். உங்கள் நேரம் உங்களுக்காகவே, அதை அடுத்தவருக்காக இழக்காதீர்கள்.உங்கள் நேரத்தை உங்கள் இலக்குகளை அடையும் முயற்சிக்காக செலவிடுங்கள். எதையும் நாளை செய்வோம் என்று தள்ளிப் போடாதீர்கள். ஒரு மணித்துளி நேரம், காலம் போய் விட்டால் திரும்பி வராது என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

வாழ்க்கை என்ற கடிகாரத்திற்கு ஒரு முறை தான் சாவி கொடுக்கப்படுகிறது.அந்த கடிகாரத்தின் முட்கள் சீக்கிரமே நின்று போகுமா  அல்லது அதிக காலம் நின்று போகுமா  என்பதை யாரும் கூற இயலாது. தற்போது இருக்கின்ற காலம் மட்டுமே உங்களுக்கு உரியது.

மன உறுதியோடு வாழ்க்கையை நடத்துங்கள். மற்றவர்கள் மீது அன்பு செலுத்துங்கள். நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலையும் திட்டமிடுங்கள்.ஒரு குறிப்பிட்ட வேலையை இவ்வளவு நேரத்திற்குள் செய்து முடிக்க வேண்டும் என்ற பழக்கத்தை வளர்த்துக் கொள்ளுங்கள்.நீங்கள் திட்டமிட்டு செய்யும் செயல்களில் மனநிறைவு இருக்கும். கால விரயத்தைத் தடுக்கலாம்...

ஆம் நண்பர்களே,  நேரமும், இப்போது உள்ள சூழ்நிலையும் மீண்டும் உங்கள் வாழ்க்கையில் திரும்பவும் வரும் என்று நீங்கள் எதிர்பார்க்க முடியாது. எனவே, காலத்தைச் சரியாகப் பயன்படுத்துங்கள். உங்களுக்கான நேரத்தை நன்கு பயன்படுத்தத் தெரிந்தாலே போதும், நீங்கள் வெற்றியின் பாதையில் நேராகச் சென்று கொண்டிருக்கிறீர்கள் என்று நம்பலாம். 


Top