logo

ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 1479 பேருக்கு கொரோனா தடுப்பூசி:சுகாதாரத்துறையினர் தகவல்

26/Jan/2021 08:15:51

ஈரோடு, ஜன:இந்தியாவில் கொரோனாவுக்கான கோவிஷுல்டு தடுப்பூசி முதற்கட்டமாக முன்கள பணியாளர்களுக்கு போடப்பட்டு வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை, பெருந்துறை அரசு மருத்துவமனை, பவானி, கோபி அரசு மருத்துவமனை சிறுவலூர் ஆரம்ப சுகாதார மையம் ஆகிய 5 மையங்களில் கடந்த 16 ஆம் தேதி முதல் போடப்பட்டு வருகிறது.

முதல் மூன்று நாட்களுக்கு நூற்றுக்கும் கீழ் உள்ள நபர்களுக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டது. அதன்பிறகு தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. தற்போது வரை அரசு, தனியார் ஆஸ்பத்திரியில் பணிபுரியும் டாக்டர்கள், நர்சுகள், சுகாதார பணியாளர்கள் ஆகியோர்களுக்கு மட்டும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. 

இதுகுறித்து சுகாதாரப் பணியாளர்கள் கூறியதாவது: ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு அரசு மருத்துவமனை, பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை உள்பட 5 இடங்களில் கொரோனா தடுப்பு ஊசி முன்கள பணியாளர்களுக்கு போடப்பட்டு வருகிறது.

ஈரோடு மாவட்டத்திற்கு முதற்கட்டமாக 13,800 கோவிஷீல்டு டோஸ்கள் வந்துள்ளது. இதுவரை 2901 பேர் தடுப்பூசிகள் போட பதிவு செய்துள்ளனர்.மாவட்டத்தில் கடந்த 16ஆம் தேதி முதல் நேற்று வரை 1479 முன் களப் பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசியான கோவிஷீல்டு போடப்பட்டுள்ளது. இதில் நேற்று மட்டும் 174 முன் களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதுவரை தடுப்பூசி போட்டு கொண்டவர்கள் அனைவரும் நலமாக உள்ளதாகவும் தெரிவி்த்தனர்.

                                                   


Top